ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பால் இந்திய பொருளாதாரம் மந்த நிலை... போட்டு உடைத்த உலக வங்கி புள்ளி விவரம்!
ஜிஎஸ்டி வரி மற்றும் பணமதிப்பிழப்பு விவகாரங்களால் இந்திய பொருளாதாரம் மந்தநிலைஅடைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
Recommended Video
வாஷிங்டன் : பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரம் 2018ம் ஆண்டின் தொடக்கத்திலும் மந்த நிலையில் தான் இருக்கும் என்று உலக வங்கி கூறியுள்ளது.
இந்திய பொருளாதாரம் மற்றும் தெற்காசிய பொருளாதாரம் குறித்து உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 2015ம் ஆண்டில் 8.6 சதவீதமாக இருந்த இந்திய பொருளாதாரம். 2017 ல் 7 சதவீதமாக சரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்றது, ஜிஎஸ்டி வரி விதித்தது உள்ளிட்ட நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரம் 2018 ல் 7.3 சதவீதம் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டிக்குப் பிறகு பொருட்கள் தயாரிப்பு குறைந்துள்ளது, எனினும் 2018 காலாண்டிற்குள் இந்த நிலைமை சரியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா நீடித்த வளர்ச்சி பெற வறுமை ஒழிப்பு பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவின் வளர்ச்சி விகித மந்தநிலை, தெற்காசிய வளர்ச்சி விகிதத்தை பாதிக்கும்.
இந்திய பொருளாதாரம் பாதிப்பு
இதன் விளைவாக பொருளாதார வளர்ச்சியில் தெற்காசியா, கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளை விட இரண்டு இடங்கள் பின்தங்கி உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 2016 ல் 7.1 சதவீதமாக இருந்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைவு, 2017 ம் ஆண்டின் முதல் காலாண்டிலேயே 5.7 சதவீதத்தை எட்டி உள்ளது. ஜிஎஸ்டி, 2018 ம் ஆண்டிலேயே இந்தியாவின் பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் முயற்சி
இதனிடையே அமெரிக்காவிற்கு சென்றுள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அங்கு கல்லூரி மாணவர்களிடையே இந்திய பொருளாதார நிலை குறித்து பேசியுள்ளார். அப்போது பணமதிப்பு நீக்க நடவடிக்கையானது மிகவும் கடுமையான நடவடிக்கையாகும். இதை செயல்படுத்த இந்திய அரசு பல தீவிரமான நடவடிக்கைகளை எடுத்தது என்றார்.
அருண் ஜேட்லி நம்பிக்கை
இந்த நடவடிக்கையால் ரொக்கமில்லா பரிவர்த்தனை அதிகரித்துள்ளதோடு, அனைத்து நடவடிக்கைகளும் வங்கி மூலமாக நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது. இத்தகைய நடவடிக்கை எதிர்காலத்தில் இந்திய பொருளாதாரத்துக்கு ஏற்றம் தரும் நிகழ்வாக நிச்சயம் இருக்கும் என்றார்.
ரகசியம் ஏன்?
பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் அரசு ரகசியம் காத்ததால் மிகப்பெரிய அளவிலான பணம் பதுக்கல் தடுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தகவல் முன்கூட்டியே கசிந்திருந்தால் தங்களிடம் இருந்த பணத்தை வைத்து மக்கள் நிலம், தங்க நகைகள் வாங்கிக் குவித்திருப்பார்கள் என்றும் அருண் ஜேட்லி பேசியுள்ளார்.