உலகின் மிக வயதான தாத்தா ஜப்பானில் காலமானார்!
டோக்கியோ: உலகிலேயே மிகவும் வயதான நபராக அறிவிக்கப்பட்டிருந்த மசாஸோ நொனாக்கா தனது 113வது வயதில் காலமானார்.
உலகில் அதிக காலம் வாழ்ந்து வரும் ஆண், பெண்களை உலக சாதனை பதிவுகளை நிர்வகித்துவரும் கின்னஸ் நிறுவனம் அங்கீகாரம் அளித்து, சிறப்பித்து வருகிறது. அந்தவகையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மசாஸோ நொனாக்காவை உலகில் வாழ்ந்து வருபவர்களில் அதிக வயதான ஆண்மகனாக கின்னஸ் நிறுவனம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அங்கீகரித்தது. அப்போது அவரது வயது 112 ஆகும்.
இவர் ஜப்பான் நாட்டு தலைநகர் டோக்கியோவில் இருந்து சுமார் 900 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹொக்கைடோ தீவில் வாழ்ந்து வந்தார். இளம் வயதில் இவர் விவசாயம் மற்றும் மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், அஷோரா பகுதியில் 'ஸ்பா’ எனப்படும் அழகு நிலையம் நடத்தி வந்துள்ளார். இனிப்பு வகைகள் மற்றும் கேக் தான் அவர் விரும்பிச் சாப்பிடும் உணவுகள் ஆகும்.
இந்நிலையில், உடல் நலக்குறைவால் நேற்று நொனாக்கா மரணம் அடைந்தார். இதனை அவரது குடும்பத்தார் உறுதி செய்துள்ளனர். நோனேக்காவுக்கு தற்போது 113 வயதாகிறது. அவருக்கு இரண்டு மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர்.
நொனாக்காவுக்கு முன்னர் 116 ஆண்டுகள் 54 நாட்கள் உயிர் வாழ்ந்து ஜப்பானில் கடந்த 2013-ம் ஆண்டில் மரணம் அடைந்த ஜிரோய்மோன் கிமுரா என்பவர்தான் கின்னஸ் சான்றுகளின்படி மிக அதிக காலம் வாழ்ந்தவராக கருதப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.