66 பேருடன் கடலில் விழுந்த எகிப்து விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு, ஆனால்...
கெய்ரோ: 66 பேருடன் மத்திய தரைக்கடலில் விழுந்து மூழ்கிய எகிப்துஏர் விமானத்தின் பாகங்கள் கிடக்கும் இடத்தை கண்டுபிடித்துள்ளதாக எகிப்து அரசு அறிவித்துள்ளது.
கடந்த மாதம் 18ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இருந்து 66 பேருடன் எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு புறப்பட்ட எகிப்துஏர் விமானம் ராடாரில் இருந்து மாயமானது. பின்னர் விமானம் மத்திய தரைக்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
விமானம் கடலில் விழும் முன்பு வெடித்துச் சிதறியதாகவும் கூறப்பட்டது. இது தீவிரவாதிகளின் நாசவேலையாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தபோதிலும் இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
மத்திய தரைக்கடலில் உள்ள கிரேக்க தீவான கார்பதோஸ் அருகே விமானத்தை தேடும் பணி நடந்து வருகிறது. இந்த தேடல் பணியில் எகிப்து, கிரீஸ், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் விமானங்கள், கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் விமானத்தின் பாகங்கள் கிடக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எகிப்து அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது. விமானத்தின் கருப்பு பெட்டி இதுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருப்பு பெட்டியில் இருந்து வரும் சிக்னல் இன்னும் 5 நாட்களில் நின்றுவிடும் என கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டது. சிக்னல் இல்லாமல் கருப்பு பெட்டியை கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.