தாய்லாந்தில் கரை ஒதுங்கிய விமான பாகம்: மாயமான மலேசிய விமானத்தினுடையதா?
பாங்காக்: தாய்லாந்தில் கரை ஒதுங்கியுள்ள விமான பாகம் கடந்த 2014ம் ஆண்டு 239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தினுடையதாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்றது. விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் மாயமானது.
விமானம் தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் விழுந்து மூழ்கிவிட்டதாகவும், அதில் இருந்த அனைவரும் இறந்துவிட்டதாகவும் மலேசிய அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் தாய்லாந்தில் உள்ள நகோன் சி தம்மாரட் மாகாணத்தில் விமான பாகம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. அந்த பாகம் மாயமான மலேசிய விமானத்தினுடையதாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கரை ஒதுங்கிய பாகம் 2 மீட்டர் அகலமும், 3 மீட்ட நீளமும் உள்ளது. அந்த பாகம் கடலுக்கு அடியில் ஓராண்டுக்கு மேல் இருந்திருக்கும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.