மாயமான இந்தோனேசிய விமானம் மலை மீது மோதி விபத்து: 54 பேர் பலி?
ஜகார்தா: இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் 54 பேருடன் மாயமான விமானத்தின் பாகங்கள் மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் பப்புவா மாகாண தலைநகர் ஜெயபுராவில் உள்ள சென்டானி விமான நிலையத்தில் இருந்து 44 பெரியவர்கள், 5 குழந்தைகள் மற்றும் 5 சிப்பந்திகள் என மொத்தம் 54 பேருடன் ட்ரிகானா ஏர் சர்வீஸ் விமானம் ஒன்று ஓக்சிபிலுக்கு ஞாயிற்றுக்கிழமை கிளம்பியது. விமானம் கிளம்பிய 30 நிமிடங்களில் அது ராடாரில் இருந்து மாயமானது.
ஓக்சிபிலில் தரையிறங்க 9 நிமிடங்களுக்கு முன்பு விமானம் மாயமானது. விமானம் மாயமான போது ஓக்சிபிலில் பலத்த காற்றுடன் மோசமான வானிலை நிலவியது. இதையடுத்து விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இந்நிலையில் விமானம் ஒன்று பிங்டாங் மாவட்டத்தில் உள்ள ஓக்பாபே கிராமம் அருகே மிகவும் தாழ்வாக பறந்து மலை மீது மோதி விபத்துக்குள்ளானதை பார்த்ததாக கிராமத்தினர் தெரிவித்தனர்.
மலைப்பகுதியில் தேடியதில் விமான பாகங்கள் கிடைத்துள்ளது. விமானத்தில் இருந்தவர்களில் யாராவது உயிர் பிழைத்துள்ளார்களாக என்பது இன்னும் தெரியவில்லை. விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் பலியாகியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இரவு நேரத்தில் தேடல் பணி கைவிடப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை முதல் விமான பாகங்கள் மற்றும் பயணிகளை தேடும் பணி துவங்கி தீவிரமாக நடந்து வருகிறது. முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் இந்தோனேசியாவின் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு 162 பேருடன் கிளம்பிய ஏர் ஏசியா விமானம் விபத்துக்குள்ளாகி அதில் இருந்த அனைவரும் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.