கோரோனா கோரத் தாண்டவம்.. சிகிச்சையளித்தவர்களையும் காவு கேட்கிறது.. வுஹான் மருத்துவமனை இயக்குநர் பலி
Recommended Video
பீஜிங்: சீனாவின் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று 1,868 ஆக உயர்ந்தது, கடந்த 24 மணி நேரத்தில், 98 பேர் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனர்.
உறுதிப்படுத்தப்பட்ட மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 72,436 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சமீபத்தில் பலியானவர்களில், 93 பேர் வைரஸ் பரவத் தொடங்கிய மையப்பகுதியான ஹூபே மாகாணத்தை சேர்ந்தவர்கள், ஹெனானை சேர்ந்த மூன்று பேரும், ஹெபீ மற்றும் ஹுனானில் இருந்து தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர் என்று தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
ஹூபேயில், 1,807 புதிய உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். கொடுமையின் உச்சமாக, வுஹான் பகுதியிலுள்ள ஒரு மருத்துமனையின் இயக்குநரும், கொரோனா வைரஸ் தாக்கி பலியாகியுள்ளார்.
வுஹானில் உள்ள வுச்சாங் மருத்துவமனையின் இயக்குனர் லியு ஜிமிங் செவ்வாய்க்கிழமை காலை பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது சிகிச்சை முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் லியு ஜிமிங் இறந்தார் என்று சீன அரசின் ஊடகம் சி.சி.டி.வி தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸால் இறந்த முதல் மருத்துவமனை இயக்குனர் இவர் என்பது பெரும் சோகம்.
இதனிடையே, மார்ச் 2 முதல் அமெரிக்க மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கான வரியை ரத்து செய்வதாக சீனா அறிவித்துள்ளது. அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர் நடந்து வந்தது. இரு நாடுகளும் பரஸ்பரம் இறக்குமதி வரிகளை தாறுமாறாக கூட்டிக் கொண்டன. ஆனால் மனிதாபிமான அடிப்படையில் அமெரிக்கா, இந்த மருத்துவ உபகரணங்களை, சீனா அனுப்பி வைத்துள்ளது. அவற்றுக்கான வரியை சீனா ரத்து செய்ய முன்வந்துள்ளது.
நோயாளி மானிட்டர்கள், ரத்தமாற்று உபகரணங்கள் மற்றும் இரத்த அழுத்தத்தை அளவிடுவதற்கான கருவிகள் ஆகியவை வரி விலக்கு பெற தகுதிவாய்ந்த உபகரணங்களில் அடங்கும்.