கொரோனா பற்றி முதல் எச்சரிக்கை... டாக்டரை நினைவுபடுத்தி அஞ்சலி செலுத்திய மக்கள்
வூகான் : கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை பற்றி முதலில் அம்பலப்படுத்தி, எச்சரித்த டாக்டர் லி வென்லியாங்கை நினைவுபடுத்தி, அவருக்கு வூகான் நகர மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
சீனாவின் வூகான் நகரில் உள்ள மருத்துவமனையில் கண் மருத்துவராக பணியாற்றியவர் லி வென்லியாங். வூகான் நகரில் கொரோனா வைரஸ் பரவ துவங்கியதும், அது பற்றி முதலில் வெளிப்படுத்தி, எச்சரிக்கை விடுத்தவர் லி. ஆனால் வதந்திகளை பரப்பியதாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
34 வயதான லி, தான் அம்பலப்படுத்திய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7 ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு சில நாட்களுக்கு பிறகு, பிரபல தொற்று நோயியல் பிரிவு நிபுணரான ஜோங் நான்சன் தனது பேட்டியில், சீனாவின் ஹீரோ என குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் சீன அதிபர் ஷி ஜின்பிங், கொரோனா வைரசிற்கு எதிராக மக்களின் போரில் போராடி ஹீரோக்களை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நினைவு கூர்ந்து உரையாற்றினார். அதில் லி பற்றி அவர் குறிப்பிடவில்லை.
கொரோனா தடுப்பூசி... இந்திய மருந்துகளுக்காக காத்திருக்கும் 25 நாடுகள்
இந்நிலையில் லி நினைவு தினத்தில் அவரை நினைவு கூர்ந்த வூகான் நகர மக்கள், பொது இடத்தில் லி.,க்கு இன்று அஞ்சலி செலுத்தி உள்ளனர். சிலர் ஆன்லைனில் தங்களின் கோபங்களை வெளிப்படுத்தி உள்ளனர்.
துவக்கத்தில் அரசு செய்த சில தவறுகளே கொரோனா வைரஸ் இந்த அளவிற்கு பரவியதற்கு காரணம் என மக்கள் சிலர் தெரிவித்துள்ளனர். வூகான் நகரில் ஆய்வு செய்ய உலக சுகாதார மையம் தற்போது நிபுணர் குழுவை அனுப்பி உள்ளது. இந்நிலையில் வூகான் நகர மக்கள், லியை நினைவு கூர்ந்து, புகழ்ந்து வருகின்றனர்.