உளவுபார்ப்பதில் இருந்து தப்பிக்க இ-மெயில் பாதுகாப்பை அதிகப்படுத்துகிறது யாகூ
வாஷிங்டன்: போலீசாரின் உளவு, ஹேக்கர்களிடமிருந்து இ-மெயில் தகவல்களை பத்திரப்படுத்த கூகுளைப்போலவே யாகூவும் பாதுகாப்பு நடைமுறைகளை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவில் அரசு அதிகாரிகள் பரிமாறிய இ-மெயில் தகவல்களை ஸ்னோடன் என்பவர் உளவு பார்த்து பல ரகசியங்களை அம்பலப்படுத்தினார். இதனால் அவரை பிடிக்க அமெரிக்கா வலை வீசி தேடிவருகிறது.
இந்நிலையில் இ-மெயில் தகவல்களை பாதுகாப்பதில் கூகுள் முழு வீச்சில் நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோன்ற நடைமுறையை யாகூ எடுத்துவருவதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கூகுள் மட்டுமின்றி மைக்ரோசாப்ட் மற்றும் பேஸ்புக் ஆகியவை ஏற்கனவே சுதாரித்துக் கொண்டு தங்கள் பயன்பாட்டாளர்களின் டேட்டாக்களை வேறு யாரும் திருடிவிடாமல் தடுக்கும் முயற்சிகளை எடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
யாகூ நிறுவனம் சார்பில் கருத்து தெரிவிக்க யாரும் கிடைக்காத நிலைியல், கூகுள் சார்பில் இந்த தகவலுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. அந்த பதிலில், எந்த ஒரு வெப்சைட் டெவலப்பர்களாக இருந்தாலும், பயனாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கூகுள் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.