செக்ஸ் அடிமைகளாக விற்பனை... ஐஎஸ்ஐஎஸ்-க்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட யாஸிதி பெண்கள்
பெய்ரூட்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வசம் சிக்கினால் பாலியல் அடிமைகளாக கொடுமைப்படுத்தப்படுவோம் என அஞ்சி பல யாஸிதி இனப் பெண்கள் தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது.
மேற்காசிய நாடுகளான சிரியா மற்றும் ஈராக்கின் பல பகுதிகளை கைப்பற்றியுள்ள, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், கிறிஸ்தவர்கள், ஷியா பிரிவு முஸ்லிம்கள் மற்றும் யாஸிதி இனத்தவர் போன்ற சிறுபான்மையினத்தவருக்கு சொல்லொணா துயரங்களை கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, ஈராக்கின் வடக்கு பகுதியில் வாழும் யாஸிதி இனத்து ஆண்களைக் கொன்று குவித்த தீவிரவாதிகள், அதே இனத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமியரை பிடித்துச் சென்று, சண்டையில் ஈடுபடும் தங்கள் வீரர்களுக்கு செக்ஸ் அடிமைகளாக பயன் படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
அந்தவகையில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பி வந்த சில பெண்கள் தங்களது சோகக் கதையை 'ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்' என்ற சர்வதேச அமைப்பிடம் தெரிவித்துள்ளனர். அதில், அடிமைச் சந்தைகளில் பெண்களும், சிறுமிகளும் வெறும் 12 டாலர்களுக்கு வாங்கப்பட்டனர் என்றும், அதில் சிலர் திரும்பினர் என்றும், அவர்கள் அடித்து காயப்படுத்தப்பட்டு மீண்டும் விற்கப்பட்டனர் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், செக்ஸ் அடிமைகளாக சிக்க விரும்பாத பெண்கள் பலர் தற்கொலை மூலம் தங்களது வாழ்க்கையை முடித்துக் கொண்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். கழுத்தில் கட்டப்படும், 'ஸ்கார்ப்' துணியால், பெண்கள், ஒருவருக்கொருவர் இழுத்து, மூச்சு திணறி தற்கொலை செய்து கொண்டனர். என்றும், சிறுமியர் பலர் துாக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டனர் என்றும் அவர்கள் நினைவு கூர்ந்துள்ளனர்.