ஐ.எஸ். தீவிரவாதிகளை எதிர்கொள்ள குர்து படைகளிடம் பயிற்சி எடுக்கும் யாசிதிகள்!!
பாக்தாத்: ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக யாசிதி சிறுபான்மை இனத்தவர் குர்து அரசு படைகளிடம் ராணுவ பயிற்சி பெற்று வருகின்றனர்.
ஈராக்கில் ஷியா, சன்னி முஸ்லிம்கள் அல்லாது குர்து மற்றும் யாசிதி என சிறுபான்மையினத்தவரும் வசிக்கின்றனர். கடந்த ஆண்டு ஈராக் மற்றும் சிரியாவின் பெரும்பகுதிகளை கைப்பற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் யாசிதி சிறுபான்மையினரையும் படுகொலை செய்தனர்.
பல்லாயிரக்கணக்கான யாசிதி சிறுபான்மையினர் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிக்க சிஞ்சார் பாலைவன குன்றுகளில் தஞ்சம் அடைந்தனர். அவர்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் முற்றுகையிட்டபோது நூற்றுக்கணக்கான யாசிதிகள் பசியால் பாலைவன குன்றுகளிலேயே பலியான சம்பவம் உலகை உலுக்கியது.
யாசிதிகளுக்கு நேர்ந்த கொடுமையைத் தொடர்ந்தே ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக வான் தாக்குதலை நடத்த அமெரிக்கா முன்வந்தது. யாசிதி இன சிறுமிகளும் பெண்களும் ஐ.எஸ். தீவிரவாதிகளால் செக்ஸ் அடிமைகளாக்கப்படுகிற கொடூரமும் நடந்தேறி வருகிறது.
அண்மையில் யாசிதி இனப் பெண்கள் குழு இந்தியாவுக்கு வருகை தந்து தங்களுக்கு ஆதரவு கோரியிருந்தது. இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தில் அமெரிக்கா ஆதரவுடன் களத்தில் இருக்கும் குர்து மாகாணத்தின் அரசு படைகளுடன் யாசிதிகள் கை கோர்த்துள்ளனர்.
யாசிதிகளுக்கு தற்போது குர்து படையான பெஸ்மெர்கா ராணுவ பயிற்சி அளித்து வருகிறது. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக இனி யாசிதி ராணுவமும் களம் இறங்க உள்ளது.
யாசிதி மற்றும் குர்து படைகளுக்கு அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் முழு ஆயுத உதவிகளை அளிக்க இருக்கின்றன. இதனால் ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு கடும் நெருக்கடி உருவாக்கப்பட்டுள்ளது.