மெக்கா மீது ஏவுகணை ஏவிய ஏமன் தீவிரவாதிகள்- தடுத்து அழித்த செளதி அரேபியா
இஸ்லாமியர்களின் புனித இடமான மெக்கா நகரம் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலை சவுதி அரேபியா தடுத்து நிறுத்தியது.
ரியாத்: இஸ்லாமியர்களின் புனித இடமான மெக்கா நகரத்தின் மீது ஹவுத்தி இனப்போராளிகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை சவுதி அரேபியா தடுத்து நிறுத்தியுள்ளது. இதனால் ஏற்பட இருந்த பெரும் அழிவு தடுக்கப்பட்டுள்ளது.
ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஹவுத்தி இனத்தவர் போராடி வருகின்றனர். இவர்களை ஒடுக்க சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், சவுதி அரேபியா நாட்டில் உள்ள இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவை குறிவைத்து ஏமனில் உள்ள ஹவுத்தி இனப் போராளிகள் சாதா மாகாணத்தில் இருந்து ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹவுத்தி இனப் போராளிகளால் வீசப்பட்ட அந்த ஏவுகணையை மெக்காவில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தூரத்தில் சவுதி நாட்டின் விமானப்படைகள் தடுத்து நிறுத்தியதோடு, அதனை தாக்கி அழித்துள்ளது. இதனால் அங்கு நிகழவிருந்த அழிவுகள் தடுக்கப்பட்டதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மேஜர் ஜெனரல் அகமது அசிரி, ஹவுத்தி இனப் போராளிகளுக்கு ஈரான் ஆதரவளிப்பதாகவும், அவர்களுக்கு பயிற்சிகள் அளித்து, இதுபோன்ற தாக்குதலில் ஈடுபட செய்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்தத் தாக்குதலை உறுதி செய்துள்ள ஹவுத்தி போராளிகள், புனித நகரமான மெக்கா மீது தாக்குதல் தொடுக்கவில்லை என்றும் பரபரப்பாக இயங்கிவரும் ஜெட்டா விமான நிலையத்தைத்தான் குறித்து தாக்குதல் நடத்தியதாகவும் கூறியுள்ளது.