பஞ்சாயத்து கலையலாம்.. ஐ.நா. பொதுச்செயலாளரே சொல்லிட்டாரு யோகாசனம் நல்லதாம்!
நியூயார்க்: யோகா எந்த ஒரு பாகுபாடும் பார்ப்பதில்லை, அதை செய்வதன் மூலம் திருப்தி கிடைப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் கூறியுள்ளார்.
முதலாவது, சர்வதேச யோகா தினம் வரும் 21ம் தேதி உலகமெங்கும் அனுசரிக்கப்பட உள்ளது. மத்திய அரசு இதற்கான முன் முயற்சிகளை தீவிரமாக எடுத்துள்ளது. அதேநேரம், இஸ்லாமிய தலைவர்கள், யோகாசனத்தின்போது சூரியனை பார்த்து நமஸ்காரம் செய்யும் நடைமுறை இருப்பதால் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், யோகா தினத்தை முன்னிட்டு இன்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கீமூன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: யோகா ஒருபோதும் யாரையும் பிரிவுபடுத்தி பார்க்காது. எல்லா மக்களும் யோகாவை செய்யலாம். திறமை, வயது, உடல் வலிமை என எந்த கட்டுப்பாடும் யோகாவுக்கு கிடையாது.
நானே கடந்த ஜனவரியில் டெல்லி வந்தபோது ஆசனம் செய்து பார்த்தேன். மரத்தை போன்ற ஆசனம் தொடக்கத்தில் பயில்வோருக்கு ஏற்றது. பேலன்ஸ் செய்ய சிறிது நேரம் பிடித்தது. ஆனால், அதை செய்ய ஆரம்பித்தபோது, ஒரு திருப்தி மனதில் ஏற்பட்டதை உணர முடிந்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்
193 உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையில், 177 நாடுகள், இந்தியா முன்மொழிந்த உலக யோகா தின கொண்டாட்டத்துக்கு ஆதரவு அளித்தன என்பது குறிப்பிடத்தக்கது.