'ராமர்' 'சீதை ' போலவே 'யோகா'வும் எங்களுடையதுதான்.. நேபாள பிரதமர் ஷர்மா ஒலி மீண்டும் சர்ச்சை பேச்சு
காத்மாண்டு: கடவுள் ராமர் நேபாளத்துக்கு சொந்தம் என்று பேசிய அந்நாட்டு (காபந்து) பிரதமர் ஷர்மா ஒலி தற்போது யோகாவும் தங்களுக்கே சொந்தம் என பேசியிருப்பது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
நேபாள பிரதமர் ஷர்மா ஒலி ஏற்கனவே, எங்கள் நாட்டின் அயோத்தியாபுரி என்ற இடத்தில்தான் ராமர் பிறந்தார்; இந்தியாவில் இப்போது இருக்கும் அயோத்தியில் பிறக்கவில்லை என கூறியிருந்தார்.
2024 லோக்சபா தேர்தல்: பிரசாந்த் கிஷோர் ஐடியா- காங். அல்லாத எதிர்க்கட்சிகளுடன் இன்று சரத்பவார் ஆலோசனை
அதேபோல் சீதையும் நேபாளத்தின் தேவ்கட் பகுதியில்தான் பிறந்தவர்; ஆகையால் ராமரும் சீதையும் தங்கள் நாட்டுக்கு சொந்தமானவர்கள் என கூறியிருந்தார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையானது.
7-வது யோகா தினம்
இந்த நிலையில் 7-வது சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. லடாக் பனிமலை தொடங்கி நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா நிகழ்ச்சிகள் நேற்று நடத்தப்பட்டன.
பிரதமர் மோடி பேச்சு
மேலும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தற்போதைய கொரோனாவுக்கு எதிரான போரில் நம்பிக்கை ஒளியாக யோகா திகழ்கிறது; கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சையில் யோகா முக்கிய பங்களிப்பு செய்கிறது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
நேபாளத்தில் உருவானதாம்
இதனிடையே நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அந்நாட்டு பிரதமர் ஷர்மா ஒலி, யோகா உருவான போது இந்தியா ஒரு நாடாகவே இல்லை; இந்தியா என்பது அப்போது பல ராஜ்ஜியங்களாக இருந்தது. நேபாளத்தில்தான் யோகா உருவானது.
சர்வதேச அங்கீகாரம்
நேபாளத்தின் யோகாவை சர்வதேச அரங்கத்தில் முன்னிறுத்தி அங்கீகாரம் பெற தவறிவிட்டோம்; ஆனால் இந்திய பிரதமர் மோடி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்து இந்தியாவுக்கு உரியது என வலியுறுத்தி தற்போது அங்கீகாரமும் பெற்றுவிட்டார் என்றார். ஷர்மா ஒலியின் இப்பேச்சு மீண்டும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.