கனடா கண்காட்சியில் ரூ. 11 லட்சம் மதிப்புள்ள கூழாங்கல் திருட்டு... பாட்டிக்கு போலீஸ் வலைவீச்சு
கனடாவில் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ரூ. 11 லட்சம் மதிப்புள்ள கல் திருடப்பட்டுள்ளது.
ஒட்டாவா: கனடாவில் நடைபெற்ற கண்காட்சியில் இருந்து ரூ. 11 லட்சம் மதிப்புள்ள கல்லை திருடிச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
கனடாவில் டொரோண்டோ நகரில் உள்ள கார்டினர் மியூசியத்தில் பிரபல கலைஞர் யோகோ ஒன் தலைமையில் கலைக்கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், கூலாங்கற்களைக் கொண்டு தியானம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன்படி, இந்தக் கண்காட்சிக்கு வந்திருந்தவர்கள் அங்கிருந்த கற்களை எடுத்து, கையில் வைத்துக் கொண்டு தியானம் செய்ய வேண்டும். பின் மீண்டும் பழைய இடத்திலேயே அந்தக் கல்லை வைத்து விட வேண்டும் எனச் சொல்லப்பட்டிருந்தது.
ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், மற்றவர்களைப் போலவே ஒரு கல்லை கையில் எடுத்து தியானம் செய்துள்ளார். ஆனால் மீண்டும் அதனை அதன் பழைய இடத்தில் வைக்கவில்லை. மாறாக அதனை திருடிச் சென்று விட்டார்.
கல் தானே என சாதாரணமாக இந்தத் திருட்டை எடுத்துக் கொள்ள இயலாது. ஏனெனில், திருட்டு போயுள்ள அந்தக் கல்லின் மதிப்பு ரூ. 11 லட்சம் எனக் கூறப்படுகிறது. அந்தக் கல்லானது யோகோ ஒன் தன் கைப்பட 'லவ் யுவர்செல்ப்’ என எழுதி இருந்தது ஆகும்.
கடந்த மாதம் 12ம் தேதி நடைபெற்ற இந்தத் திருட்டினை, சிசிடிவி கேமராக் காட்சிகளின் உதவியோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தாண்டு பிப்ரவரி மாதம், பிலடெல்பியாவில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான சிலையில் இருந்து, அதன் கட்டை விரலை மர்மநபர் ஒருவர் திருடிச் சென்றது நினைவு கூரத்தக்கது.