ஜப்பான் புதிய பிரதமர்...யோஷிஹைட் சுகா தேர்வு... பொருளாதாரத்தை சீரமைக்க சூளுரை!!
டோக்கியோ: ஜப்பான் நாட்டின் பிரதமராக இருந்த ஷின்சோ அபே உடல் நலம் பாதிப்பு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து விடுதலை ஜனநாயக கட்சியின் தலைவராக அந்த நாட்டின் நீண்ட நாள் அமைச்சராக இருக்கும் யோஷிஹைட் சுகா தேர்வு செய்யப்பட்டு இருந்தார். வயது 71. இந்த நிலையில் சுகா இன்று அந்த நாட்டின் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார். வரும் 2021 ஆம் ஆண்டு வரை அந்த நாட்டின் பிரதமாராக நீடிப்பார்.
ஜப்பான் நாட்டின் கிராமத்தில் குழந்தை பருவத்திலேயே ஸ்ட்ராபெர்ரி விவசாயத்தில் ஆர்வம் ஏற்பட்டு 1948ல் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் யோஷிஹைட் சுகா. 1969ல் ஹோசி பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். பல்வேறு செய்தித்தாள்களும், டிவி சேனல்களும் இவரை ஷின்சோவின் வலது கரம் என்றே வர்ணித்து வந்துள்ளன. இவர்தான் ஷின்சோவுக்கு அடுத்த ஜப்பான் நாட்டின் பிரதமராக வலம் வருவார் என்று பேசப்பட்டது.
இந்த நிலையில் இன்று கூடிய ஜப்பான் நாடாளுமன்றத்தில் பிரதமராக யோஷிஹைட் சுகா தேர்வு செய்யப்பட்டார். இதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மொத்தம் 462 வாக்குகளில் 314 வாக்குகளைப் பெறும் பிரதமராக யோஷிஹைட் சுகா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து இவர் பிரதமராக தேர்வு செய்யப்பட்டதாக கீழவை சபாநாயகர் தடமோரி ஓஷிமா அறிவித்தார்.
உடனடியாக அமைச்சரவையில் இவர் எந்த சீர்திருத்தமும் செய்யவில்லை. முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே அமைச்சரவையில் இருந்த அமைச்சர்களில் எந்த மாற்றமும் இவர் செய்ய மாட்டார் என்று உள்ளூர் செய்தித்தாள்களில் செய்தி வெளியாகியுள்ளது.
பதவியேற்றுள்ள நிலையில் அவர் அளித்து பேட்டியில், ''நாட்டின் பொருளாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். பொருளாதாரத்தை மீட்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளிலும் அரசு ஈடுபடும்'' என்றார்.
இவருக்கு என்று அரசியல் பின்னணி எதுவும் இல்லை. தன்னைத் தானே அரசியலில் வளர்த்துக் கொண்டவர். ஆனால், ஷின்சோ அப்படி இல்லை. அவரது தாத்தா, தந்தை என்று அந்த நாட்டின் பிரதமர்களாக இருந்துள்ளனர்.
வியட்நாம் போரில் பாதுகாப்பு விஷயத்தில் அமெரிக்காவுடன் கை கோர்ப்பதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருந்தவர். அதற்கான போராட்டங்களிலும் பங்கேற்றவர். இதில் இருந்து அரசியலில் பங்கேற்றார். இதையடுத்து, 1987ல் யோகோஹமா நகர தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 1996ல் தேசிய அரசியலில் ஈடுபட்டார்.
ஜப்பான் நாட்டின் புதிய பிரதமர்... இவர்தான்... முன்னாள் பிரதமர் அபேவுக்கு நெருக்கமானவர்!!
கடந்த சனிக்கிழமை யோஷிஹைட் சுகா பேட்டியளித்தார். அப்போது, ''ஜப்பான் நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் கடந்த 1947க்குப் பின்னர் திருத்தம் செய்யப்படவில்லை. திருத்தம் செய்யப்படும். நாட்டில் வேலை வாய்ப்பை உருவாக்குவது, மக்களுக்கு வாழ்வாதாரம் கிடைப்பது மற்றும் நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஜப்பான் - அமெரிக்க உறவு மேற்கொள்ளப்படும்'' என்றார்.
இத்துடன் முன்னாள் பிரதமர் அபேவின் வழியில் சென்று உள்நாட்டு தேவையை அதிகரிக்கும் வகையில் பொருளாதாரத்தை சீரமைப்பது, பொருளாதாரத்தை மீட்பது, கட்டமைப்பு சீர்திருத்தம், பண தளர்த்தல் மற்றும் நிதி விரிவாக்கம் ஆகியவை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்து இருந்தார்.