லவ் யூ அம்மா, அப்பா.. உருக வைக்கும் தாய் சிறுவர்களின் கடிதம்.. குகையிலிருந்து வந்த பாசக் குரல்கள்!
மே சாய், தாய்லாந்து: தாய்லாந்து நாட்டில் நீர் சூழ்ந்துள்ள குகைக்குள் சிக்கியுள்ள இளம் கால்பந்து வீரர்கள் தாங்கள் நலமாக இருப்பதாகவும், தைரியமாக இருங்கள் என்றும் கூறி எழுதியுள்ள கடிதம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
வடக்கு தாய்லாந்தில் 12 பள்ளி மாணவர்களும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளரும் மாயமாகினர். பயிற்சிக்காக போன இடத்தில், சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையில் அவர்கள் சிக்கிக் கொண்டனர். இவர்களை மீட்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.
குகையின் நுழைவாயில் குடும்பத்தினர் கூடி பிள்ளைகளின் வருகைக்காக காத்துள்ளனர். இந்த நிலையில் இந்த சிறுவர்கள் துண்டு பேப்பரில் தங்களது பெற்றோருக்கு ஒரு கடிதம் எழுதி அதை அனுப்பியுள்ளனர். உருக வைப்பதாக உள்ளது அந்தக் கடிதம்.
அப்பா அம்மா தம்பி
15 வயதான பிபாப் போட்டி என்ற சிறுவன், அப்பா, அம்மா, தம்பிக்கு எனது அன்புகள் என்று கூறியுள்ளான். மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு நீச்சல் வீரர் மூலம் இந்தக் கடிதங்கள் வெளியில் வந்துள்ளன. இதை தாய்லாந்து கடற்படை தனது பேஸ்புக்கில் போட்டுள்ளது.
போர்க் வேண்டும்
அதில் ஒருவன், நான் வெளியில் வந்த பிறகு எனக்கு கிரில்ட் போர்க்கும், காய்கறிகளும் வாங்கித் தருவீர்களா என்று ஒரு சிறுவன் கேட்டுள்ளான். 16 வயதான பீர்பாட் என்ற சிறுவன் , அம்மா, அப்பா, தங்கைக்கு எனது அன்புகள். கவலைப்படாதீங்க. தைரியமா இருங்க என்று கூறியுள்ளது அனைவரையும் நெகிழ வைப்பதாக உள்ளது. இந்த சிறுவன் தனது 16வது பிறந்த நாளை குகைக்குள் சிக்கிய நிலையில் கொண்டாடியுள்ளான்.
10 நாட்களாக போராட்டம்
குகைக்குள் இவர்கள் சிக்கி 10 நாட்களாகி விட்டன. இன்னும் ஒருவரும் மீட்கப்படவில்லை. இவர்கள் பத்திரமாக திரும்பி வருவதற்காக தாய்லாந்தே பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளது. இவர்களை மீட்கும் பணியில் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு வழிகளிலும் துளைகள் போட்டு குகைகுள் சென்று அனைவரையும் மீட்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. குகைக்குள் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற ராட்சத பம்ப்புகள் மூலம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தண்ணீர் முழுமையாக வடிந்து விட்டால் இவர்கள் நடந்தே வெளியேறி வந்து விட முடியும்.
மழை அபாயம்
ஆனால் மீண்டும் பெருமழை பெய்யும் வாய்ப்பிருப்பதாக வானிலை மைய அதிகாரிகள் எச்சரித்திருப்பதால் அனைவரும் பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர். மீட்புப் பணிகளை எப்படி விரைவுபடுத்தலாம் என்ற ஆலோசனைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.