சிகிச்சை மையத்தில் மைனஸ் 240 டிகிரி பாரன்ஹீட் உறைநிலை அறைக்குள் சிக்கிய இளம்பெண் பலி
நியூயார்க்: அமெரிக்காவில் கிரையோதெரபி சிகிச்சை மையம் ஒன்றில் மைனஸ் 240 டிகிரி உறைநிலை அறைக்குள் சிக்கி பெண் ஊழியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 17-ம் நூற்றாண்டில் இருந்தே குளிர்ந்த நீர் அடங்கிய பைகள், அல்லது ஐஸ்கட்டிகள் கொண்ட பைகள் போன்றவற்றால் திசுக்கள் பாதிக்கப்பட்ட இடங்களில் சிகிச்சை அளிக்கும் வைத்திய முறைகள் மேற்கத்திய நாடுகளில் நடைமுறையில் இருந்துள்ளது. தற்போது குளிர்பதன இயந்திரங்களின் துணையுடன் இந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், அமெரிக்காவின் நெவாடா மாநிலத்தில் உள்ள ஹென்டர்சன் நகரில் மனித உடலின் திசுக்களில் ஏற்படும் சேதத்தை சீர்படுத்த ‘கிரையோதெரபி' எனப்படும் குளிர்சிகிச்சை அளிக்கும் மையம் ஒன்று இயங்கி வருகிறது.
அங்கு திசு சார்ந்த பாதிப்புகளால் இங்கு சிகிச்சைக்குவரும் நோயாளிகளுக்கு அதிகபட்சமாக மூன்று நிமிடங்கள் வரைமட்டும் இந்த ‘கிரையோதெரபி' சிகிச்சை அளிக்கப்படும்.
இங்கு மேனஜராக செல்சியா அகே என்ற இளம்பெண் பணி புரிந்து வந்தார். நேற்று பணி முடிந்து கிளம்பிய செல்சியா, ‘கிரையோதெரபி' சிகிச்சை அளிக்கும் அறைக்குள் நுழைந்து, அங்கிருந்த இயந்திரங்களை எல்லாம் அணைத்து நிறுத்த முயன்ற போது, எதிர்பாராத விதமாக இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இன்று காலை அவரை இயந்திரத்திற்குள் இருந்து மற்ற ஊழியர்கள் சடலமாக மீட்டுள்ளனர். சுமார் 240 டிகிரி உறைநிலை கொண்ட அந்த இயந்திரத்திலேயே 10 மணி நேரத்திற்கும் மேலாக இருந்ததால், ரத்தம் உறைந்து, இதயத்துடிப்பு மற்றும் சுவாசப்பை செயலிழந்ததால் அவரது உயிர் பிரிந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், செல்சியாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். சிகிச்சை இயந்திரங்களை நன்கு இயக்கத் தெரிந்த அவர் எப்படி அதில் சிக்கிக் கொண்டார் என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதோடு இவ்வளவு அதிநவீன வசதியுடன் கூடிய அந்த சிகிச்சை மையத்தில் ஒரு கண்காணிப்பு கேமரா கூட பொருத்தப்படாமல் இருந்தது அவர்களது சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவுகளுக்குப் பின்னரே இது குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.