தட்ஸ்தமிழில் செய்தி வெளியிட்ட 24 மணி நேரத்தில் துபாயில் இறந்த தமிழக இளைஞரின் அடையாளம் தெரிந்தது
துபாயில் பணிபுரிந்து வந்த தமிழக இளைஞர் சேகர் தங்கராஜ் (வயது சுமார் 30). உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மார்ச் மாதம் துபாய் ராஷித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி உயிர் இழந்தார்.
துபாய் ஈமான் அமைப்பு இந்திய கன்சுலேட் கேட்டுக்கொண்டதன் பேரில் இறந்த தமிழக இளைஞர் குறித்த விபரங்களை அறிய தட்ஸ் தமிழ் மூலம் புகைப்படத்தை வெளியிட்டது.
செய்தி வெளியிட்ட 24 மணி நேரத்தில் புகைப்படத்தைக் கண்ட அவரது உறவினர்கள் ஈமான் அமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் திருப்பனந்தாள் ஏ முஹம்மது தாஹா மற்றும் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் ஆகியோரை தொடர்பு கொண்டு விபரம் தெரிவித்தனர்.
இதன் விபரமாவது சேகர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் விநாயகனேந்தலைச் சேர்ந்தவர். 15 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக துபாய் வந்துள்ளார். அதன் பின் குடும்பத்தினருடனான தொடர்பு முழுமையாக இல்லை. இதனிடையே அவரது தந்தை இறந்து விட்டார். தற்பொழுது ஊரில் அவரது அம்மா மற்றும் 2 தம்பிகள் உள்ளனர்.
அவரது அம்மாவின் விருப்பப்படி அவரின் உடல் இந்திய கன்சுலேட்டின் உதவியுடன் தாயகம் அனுப்ப துபாய் ஈமான் அமைப்பு முயற்சி மேற்கொண்டுள்ளது.