உலகை உறைய வைக்கும் வினோத நிகழ்ச்சி..10,000 நாய்களை பலியிடும் சீனர் திருவிழா ஜூன் 21-ல் தொடக்கம்
யூலின் நாய் இறைச்சி திருவிழா வரும் 21-ந் தேதி தொடங்குகிறது.
யூலின்: உலகையே உறைய வைக்கும் வகையில் 10,000க்கும் மேற்பட்ட நாய்களை இறைச்சிக்காக பலியிட்டு கொண்டாடக் கூடிய சீனர்களின் திருவிழா வரும் 21-ந் தேதி தொடங்குகிறது.
சீனாவின் குவாங்ஸி மாகாணத்தின் யூலினிக் ஆண்டு தோறும் லிச்சி நாய் இறைச்சி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இவ்விழாவுக்கு உலகம் முழுவதும் உள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு யூலின் லிச்சி நாய் இறைச்சி வரும் 21-ந் தேதி தொடங்குகிறது. சுமார் 1 வாரம் இந்த நாய் கறி திருவிழா நடைபெறும்.
உடலுக்கு குளிர்ச்சி தரும் நாய் இறைச்சி
கடந்த 10 ஆண்டுகளாகத்தான் இத்தகைய திருவிழா நடைபெற்று வருகிறது. சீனர்களைப் பொறுத்தவரை கோடைகாலங்களில் நாய் இறைச்சியை பெருமளவு உண்பது உடலுக்கு நல்லது என்பது நம்பிக்கை. அதேபோல் தங்களது பாரம்பரிய நம்பிக்கை சார்ந்தும் நாய்களை பலியிடுதலும் அரங்கேறும்.
நாய் திருட்டுகள் அதிகம்
ஆனால் இத்திருவிழாவில் விற்பனை செய்வதற்காகவே 'நாய் வேட்டை' 'நாய் திருட்டு' அமோகமாக நடைபெறுகிறது என்பது விலங்குகள் நல ஆர்வலர்களின் குற்றச்சாட்டு. அத்துடன் மிகக் கொடூரமான முறையில் கூண்டுகளில் அடைத்து யூலினுக்கு நாய்கள் கொண்டு வரப்படுவதாகவும் கூறப்படுகிறது.
உயிருடன் தீயில் வாட்டப்படும்
யூலின் திருவிழாவில் நாய்கள் உயிருடன் விற்பனை செய்யப்படும். விற்பனை செய்யப்படும் நாய்கள் அங்கேயே வெட்டப்பட்டு அல்லது உயிருடன் தீயில் வாட்டப்பட்டு இறைச்சியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். நாய்கள்தான் என்று இல்லை பூனைக்கறியும் இந்த திருவிழாவில் தாராளமாகக் கிடைக்கும்.
எதிர்ப்பை கண்டு கொள்ளாத சீனர்கள்
இப்போது இத்திருவிழாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விலங்குகள் நல ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் பிரசாரத்தை நடத்தி வருகின்றனர். ஆனால் சீனர்கள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் 'நாய் கறி' திருவிழாவுக்கு ஜரூராக தயாராகி வருகின்றனர்.