அடேங்கப்பா.. மூன்றே போட்டியில் இத்தனை விக்கெட்டுகளா! தென் ஆப்பிரிக்காவை தெறிக்க விட்ட சுழல் புயல்கள்
Recommended Video
கேப்டவுன்: இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு போகும்போதெல்லாம் வயிற்றுக்கும், தொண்டைக்கும் உருவமில்லாத ஒரு உருளை இந்திய அணி வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் உருளும்.
இப்போது அது தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கும் அவர்களின் ரசிகர்களுக்கும் உருளுகிறது. காரணம், உலகம் இப்போது உருண்டு இந்தியா பக்கம் வந்துள்ளது.
அதற்கு பக்கபலமாக இருப்பது இந்திய அணி கேப்டன் கோஹ்லி மட்டுமல்ல, சுழற்பந்து இரட்டையர்கள் என புகழப்படும் சஹல் மற்றும் குல்தீப்தான்.
ஜாம்பவான்கள் பந்து வீச்சு
தென் ஆப்பிரிக்காவில் இந்தியா இதுவரை சோபிக்க தவறியதற்கு, இந்திய ஸ்பின் பந்து வீச்சு அங்கு எடுபடாததே காரணம். கும்ப்ளே, ஹர்பஜன், அஸ்வின் என காலத்திற்கு ஒரு பெஸ்ட் ஸ்பின்னர்களை இந்தியா உற்பத்தி செய்து வந்தாலும் கூட, அவர்களின் மாயாஜாலம் தென் ஆப்பிரிக்காவிலுள்ள வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான பிட்சுகளில் எடுபடுவதில்லை. தாய் மண்ணில் இந்தியா புலியாகவும், வெளியே எலியாகவும் இருந்ததற்கு இதுதான் முக்கிய காரணம். ஆனால் இப்போது இந்தியா எல்லா இடத்திலும் சிங்கம்தான்.
சொதப்பிய அஸ்வின், ஜடேஜா ஜோடி
கடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் இங்கிலாந்தில் 2017ல் நடைபெற்றது. இந்திய அணியின் சார்பில் அஸ்வின் 3 போட்டிகளில் 1 விக்கெட்தான் வீழ்த்தினார். ஜடேஜா 5 போட்டிகளில் 4 விக்கெட்டுகளைத்தான் வீழ்த்தினார். இருவரும் இணைந்து 5 விக்கெட் மட்டும் தான் வீழ்த்தினர். வேகப்பந்து வீச்சுக்கும், பேட்டிங்கிற்கும் சாதகமான பிட்சுகளில் இந்திய ஸ்பின்னர்கள் நிலை இதுதான் என்பதை புடம் போட்டு காட்டியது அந்த தொடர்.
விழிப்படைந்த இந்திய அணி
இந்த நிலையில், வரும் 2019 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடக்கவுள்ளதால், முன்கூட்டியே விழிப்படைந்தது இந்திய அணி நிர்வாகம். விரல் ஸ்பின்னர்கள் வேண்டாம், மணிக்கட்டையை பயன்படுத்தும் (wrist spinners) சஹல், மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரை களமிறக்கலாம் என முடிவு செய்தது. இதன்பிறகே இருவரும் தொடர்ச்சியாக ஒருநாள் மற்றும் டி20 அணியில் சேர்க்கப்பட்டனர்.
தென்ஆப்பிரிக்காவில் இந்தியா
தென் ஆப்ரிக்க மண்ணில் கடந்த 2006-07 கும்ப்ளே 3 போட்டிகளில் 2 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங் 3 போட்டிகளில், 1 விக்கெட்டையும் மட்டுமே வீழ்த்தினரர். 2013ல் அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3போட்டிகளில் 1 விக்கெட் மட்டுமே எடுத்தனர். ஒருநாள் தொடரில் இருவரும் 308 ரன்கள் விட்டுக் கொடுத்த போதிலும், மொத்தமே 2 விக்கெட் தான் வீழ்த்த முடிந்தது.
அசத்தும் ஸ்பின்னர்கள்
ஆனால் இப்போது அப்படியில்லை. சஹல் முறையே, 2, 5, 4 விக்கெட்டுகளை முதல் 3 போட்டிகளில் வீழ்த்தியுள்ளார். குல்தீப் முறையே 3, 3, 4 விக்கெட்டுகளை முதல் 3 ஒருநாள் போட்டிகளில் வீழ்த்தியுள்ளார். இருவரும் இணைந்து, முதல் 3 போட்டிகளிலேயே, 21 விக்கெட்டுகளை சாய்த்துள்ளனர். 52.2 ஓவர்கள்தான் இவர்களுக்கு தேவைப்பட்டுள்ளது. சராசரியாக சுமார், 10 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இவர்களால் வீழ்த்த முடிகிறது. இந்திய அணியின் வெற்றிக்கு கோஹ்லி, தவான், ரஹானே போன்ற பேட்ஸ்மேன்களுடன், இவர்கள் இருவருமே மிகப்பெரிய காரணம்.