ஒசாமா பாகிஸ்தானில் இருந்தது சர்தாரி, ராணுவ தளபதிக்கு தெரியுமே: முன்னாள் பாக். அமைச்சர்
இஸ்லாமாபாத்: அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் இருந்தது அந்நாட்டு ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐக்கு தெரியும் என அந்நாட்டு முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் சவுத்ரி அகமது முக்தார் தெரிவித்துள்ளார்.
அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் ஆப்கானிஸ்தானில் இருந்து குடும்பத்துடன் வெளியேறி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே உள்ள அப்போத்தாபாத்தில் குடியேறினார். ராணுவ நகரான அப்போத்தாபாத்தில் பெரிய காம்பவுண்ட் சுவர் உள்ள வீட்டில் வசித்து வந்த அவர் கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி அமெரிக்கப் படைகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் இது குறித்து முன்னாள் பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் சவுத்ரி அகமது முக்தார் கூறுகையில்,
ஒசாமா பின் லேடன் அப்போத்தாபாத்தில் இருந்தது அமெரிக்கப் படைகளுக்கு தெரியும் முன்பே பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் சிலர், ராணுவ அதிகாரிகள் மற்றும் ஐஎஸ்ஐக்கு தெரியும். முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, முன்னாள் ராணுவப் படை தளபதி அஸ்பாக் பர்வேஸ் கயானி உள்ளிட்டோருக்கு ஒசாமா பாகிஸ்தானில் இருந்தது நன்கு தெரியும் என்றார்.
அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தும் வரை ஒசாமாவின் இருப்பிடம் பற்றி தங்களுக்கு தெரியவே தெரியாது என பாகிஸ்தான் தெரிவித்து வரும் நிலையில் முக்தார் இவ்வாறு கூறியுள்ளது பலரையும் வியப்படைய வைத்துள்ளது.