மீண்டும் உலகை மிரட்டும் 'ஜிக்கா' வைரஸ்.. 250 கோடி பேர் பாதிக்கபட வாய்ப்பு.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை
பிரேசில்: உலகம் முழுவதும் சுமார் 250 கோடி பேர் ஜிக்கா வைரஸால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
"தி லேன்செட் இன்ஃபெக்ஷியஸ் டிசீசஸ்" என்ற மருத்துவ இதழில் உலக அளவில் சுமார் 250 கோடி பேருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆப்ரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நைஜீரியா உள்ளிட்ட நாடுகளி்ல் உள்ள மக்களுக்கு அதிக அளவில் பரவ வாய்ப்பு உள்ளதாக இந்த ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகள் பல இடங்களிலும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாதிப்பு குறையக்கூடும் என்றும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ், வியட்நாம், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் போதுமான மருத்துவ வசதிகள் இல்லாத நிலையில் ஜிக்கா வைரஸ் தொற்று அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
கொசு மூலமாக பரவும் இந்த நோய் முதன் முதலில் கடந்த 1947ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், கடந்தாண்டு தான் இது தீவிரமாக பிரேசிலில் பரவியது. டெங்கு, சிக்கன்குன்யா ஆகியவற்றை பரப்பும் ஏடிஸ் ஏகிப்தி கொசு மூலமே ஜிக்கா வைரஸ் பரவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.