'யானை கறி' விருந்துடன் 91வது பிறந்த நாளை அமர்க்களமாக கொண்டாடிய ஜிம்பாப்வே அதிபர்!
ஹராரே: ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே தமது பிறந்த நாளை யானைக்கறி விருந்துடன் அமர்க்களமாக கொண்டாடியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஜிம்பாப்வே நாட்டின் அதிபராக ராபர்ட் முகாபே 1980 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். உலகின் மிக வயதான தலைவர்களில் முகாபேயும் ஒருவர்.
அண்மையில் முகாபே தமது 91-வது பிறந்த நாளை விக்டோரியா பால்ஸ் என்ற ரிசார்ட்டில் விமரிசையாக கொண்டாடினார். இதற்காக ரூ.6 கோடி வரை செலவிடப்பட்டது.
அந்த விழாவில் அவரது குடும்பத்தினருடன் ஏராளமான முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர். இதில் சுமார் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அப்போது அவர் தனது மனைவி கிரேசுடன் சேர்ந்து 91 பலூன்களை பறக்க விட்டார்.
பிறந்த நாள் விழாவில் பங்கேற்றவர்கள் நீண்ட வரிசையில் நின்று முகாபேவுக்கு பரிசு பொருட் களை வழங்கினர். இதில் ஒரு குட்டி யானை, 2 எருமைகள், 2 ஆட்டு கிடாக்கள், சிங்கம், முதலைகளும் அடங்கும்.
இந்த விழாவில் பங்கேற்றவர்களுக்கு பிரம்மாண்டமாக விருந்தளிக்கப்பட்டது. முக்கியமாக யானை இறைச்சி சமைத்து வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக 2 குட்டி யானைகள் சுட்டுக் கொல்லப்பட்டு விருந்தாக்கப்படதாகவும் கூறப்படுகிறது. மேலும் 40 பசுமாடுகளும் விருந்துக்காக வெட்டப்பட்டுள்ளன.
ராபர்ட் முகாபேயின் இந்த ஆடம்பர 'யானைக்கறி' பிறந்த நாள் விழாவுக்கு அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.