உத்திரமேரூரில் சட்டென சரிந்த கல்குவாரி... நசுங்கி தொழிலாளர்கள் 2 பேர் பலி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்குவாரியில் நிகழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கற்களுக்கு அடியில் சிக்கியிருக்கும் பலரை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே மதூரில் உள்ள கல்குவாரியில் திடீரென ஏற்பட்ட விபத்தில் கற்குவியலுக்கு அடியில் ஏராளமானோர் சிக்கிக்கொண்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது. 2 பேரின் உடல்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த மதூர் கிராமத்தில் சில கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. வெடி பொருட்களை கொண்டு பாறைகளை உடைப்பதால் அங்குள்ள வீடுகளும் சேதமடைவதாக புகார் எழுந்துள்ளது. வீடுகள் விரிசல் விடுவதோடு, சீலிங் உதிர்ந்து விடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஒரு குவாரியில் இன்று காலையில் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். அப்போது குவாரியின் ஒரு பகுதியில் இருந்த பாறை கற்கள் சரிந்து விழுந்தன. ஏராளமான தொழிலாளர்கள் மீது பெரிய கற்கள் விழுந்து நசுக்கின. கற்களின் அடியில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
லாரிகள், பொக்லைன் இயந்திரங்களின் மீதும் பாறைகள் சரிந்து விழுந்துள்ளன. முதற்கட்டமாக இரண்டு பேரின் உடல்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏராளமானோர் கற்களுக்கு அடியில் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.