திருப்போரூரில் என்னதான் நடக்கிறது.. அடுத்தடுத்து வெடிக்கும் மர்ம பொருட்கள்.. போலீஸ் தீவிர சோதனை!
மர்ம பொருள் வெடித்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்
காஞ்சிபுரம்: திருப்போரூர் அருகே என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை மர்ம பொருள் வெடித்து, ஏற்கனவே ஒருவர் உயிரிழந்த நிலையில், இன்று இன்னொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 2-வது நாளாக அங்குள்ள மர்ம பொருள் குறித்த சோதனை மிக தீவிரமாக நடந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்போரூரை அடுத்த மானாமதியை சேர்ந்த இளைஞன் திலீபன். இவருக்கு நேற்று பிறந்த நாள் என்பதால் நண்பர்கள் கேக் வெட்டி கொண்டாட முடிவு செய்தனர். அதற்காக 5 நண்பர்கள் திலீபனை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள கெங்கையம்மன் கோயில் குளத்திற்கு சென்றனர்.
கேக் வெட்டும் சமயத்தில், பக்கத்தில் உள்ள புதரில் ஒரு மர்ம பொருள் இருந்தது. அது என்னவாக இருக்கும் என்று அதை 6 பேரும் எடுத்து பார்த்துள்ளதாக தெரிகிறது. ஆனால் அதை திறக்கவே முடியவில்லை. அதனால் உடைத்து பார்க்கலாம் என்று முயற்சி செய்துள்ளதாகவும், அப்போது திடீரென பயங்கரமாக அந்த மர்ம பொருள் வெடித்து சிதறியதாகவும் சொல்லப்பட்டது.
ஏதோ நில அதிர்வு வந்துவிட்டதுபோல அப்படி ஒரு சத்தமாம்! இதனால் அந்த ஊர் மக்கள் பதறி கொண்டு வந்து பார்த்தால், 6 பேரும் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தனர். அவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முற்படும்போது, சூர்யா என்பவர் இறந்துவிட்டார். மீதமுள்ள 5 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பிறந்த நாள் கொண்டாட ஆசைப்பட்ட திலீபனும் இன்று உயிரிழந்தார்.
இது குறித்து மாவட்ட எஸ்பி உள்ளிட்டோர் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த மர்மபொருள் என்னவென்றே தெரியவில்லை. ஒருவித பழுப்பு நிறத்தில் இருந்ததாம். ஆனால் அந்த பாகங்களை வைத்து ஆய்வு நடந்து வருகிறது. பக்கத்தில் குவாரிகள் உள்ளதால், பாறைகளை உடைக்க வெடிபொருள் ஏதாவது இங்கு தவறி வந்ததா என்று தெரியவில்லை.
சம்பவம் நடந்த பகுதிக்கு பக்கத்திலேயே ராணுவ பயிற்சி மையம் உள்ளதால், அங்கிருந்து இந்த வெடிபொருள் வந்து விழுந்ததா என்றும் தெரியவில்லை. இருந்தாலும் மர்ம பொருள் வெடித்ததில் இருந்தே கோவிலை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், அந்த ஊரில் ஒருவித பதற்றமும் நிலவி வருகிறது. இந்த சம்பவம் புதிராக இருக்கிறது என்று டிஐஜி தேன்மொழி சொன்னாலும் தீவிர விசாரணை இன்னமும் நடந்து வருகிறது.