ஒரு சந்தோஷ செய்தி.. ஹரிணி பாப்பா கிடைத்து விட்டாள்!
2 வயது காணாமல் போன சிறுமி ஹரிணி மும்பையில் மீட்கப்பட்டார்.
Recommended Video
காஞ்சிபுரம்: தமிழக மக்களுக்கு ஓர் நற்செய்தி.. இவ்வளவு நாள் காணாமல் போய் நம்மை எல்லாம் கலங்கடித்த ஹரிணி பாப்பா இப்போது கிடைத்துவிட்டாளாம்!!
உத்திரமேரூரை அடுத்துள்ள மானாம்பதி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி வெங்கடேசன் - காளியம்மா. இவர்கள் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்கள். இவர்களது 2 வயது குழந்தைதான் ஹரிணி.
இவர்கள் சீப்பு, முத்துமணி, கண்ணாடி போன்ற பொருட்களை விற்கிறார்கள். அதனால் எங்கு திருவிழா நடந்தாலும் அங்கு சென்றுவிடுவார்கள். அப்படித்தான் 3 மாதத்துக்கு முன்பு இருவரும் கிழக்கு கடற்கரைச் சாலை இடைக்கழிநாடு பகுதியில் நடைபெற்ற கோயில் திருவிழாவுக்கு ஹரிணியை தூக்கி கொண்டு சென்றார்கள்.
ஹரிணியை காணோம்
வியாபாரத்தை முடித்துவிட்டு, ஊர் திரும்பினார்கள். ஆனால் இரவு லேட்டாகி விட்டதால், பவுஞ்சூர் என்ற பகுதியில் அப்படியே தங்கிவிட்டார்கள். நடுராத்திரி கண்விழித்தபோதுதான் ஹரிணி காணாமல் போனது பெற்றோருக்கு தெரியவந்தது. எங்கெங்கோ அலைந்தார்கள்... தேடினார்கள்.. குழந்தை கிடைக்கவே இல்லை. அதனால் அணைக்கட்டு போலீசில் புகாரும் அளித்தனர்.
போஸ்டர் ஒட்டிய மக்கள்
போலீஸ் ஒரு பக்கம் தேடினாலும், ஹரிணியின் மழலை முகம் தமிழக மக்களை என்னவோ செய்தது. அதனால் நிறைய தனியார் அமைப்புகள் சோஷியல் மீடியாவில் ஹரிணிக்காக களம் இறங்கினார்கள். சொந்த செலவில் போஸ்டர்கள் அடித்து ஆங்காங்கே ஒட்டினார்கள், ஹரிணி படத்தை இணையத்தில் போட்டு கண்டுபிடிக்க வேண்டுகோள் விடுத்தார்கள்
இளைஞர் போட்டோ
சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி, ஹரிணி விவகாரத்தில் இளைஞர் ஒருவரின் புகைப்படத்தை வெளியிடவும், அந்த நபர் மும்பையில் இருப்பதாக தகவல் பரவியது. இதனால் போலீசார் மும்பைக்கு விரைந்தனர்.
தைரியமா இருங்க..
இந்த சமயத்தில்தான் லதா ரஜினிகாந்த், ஹரிணியின் அம்மா காளியம்மாளை போனில் கூப்பிட்டு பேசினார். தான் நடத்தி வரும் குழந்தைகள் அமைப்பு மூலம் ஹரிணியை தேடி வருகிறோம் என்றும், மும்பையில் ஹரிணி போலவே ஒரு குழந்தை இருப்பதாக தகவல் வந்திருக்கிறது, அதனால் கவலைப்படாமல் இருங்கள், விரைவில் குழந்தையை மீட்கலாம் என்று தைரியம் சொன்னார்.
ஹரிணிக்கு முத்தமழை
இப்போது, ஹரிணி பாப்பா கிடைத்துவிட்டாளாம். திருப்போரூர் அருகே பாப்பாவை மீட்டு விட்டனர். 3 மாத காலம் சாப்பாடு, தண்ணி இல்லாமல் தவித்து கிடந்த பெற்றோரிடம் ஹரிணி ஒப்படைக்கப்பட்டாள். குழந்தையை பார்த்ததும் கட்டித்தழுவி முத்தமழை பொழிந்தனர் பெற்றோர்!! ஹரிணி பாப்பா கிடைத்து விட்ட சந்தோஷம் இப்போது நமக்கும்தான்!!