செப்டிக் டேங்கை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 பேர் பலி.. ஸ்ரீபெரும்புதூரில் ஷாக்!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ரம்பாக்கம் பகுதியில் இயங்கிவரும் தனியார் கேட்டரிங் நிறுவனத்தில் உள்ள செப்டிக் டேங்க்கினை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டப்போது விஷவாயு தாக்கியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
Recommended Video
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ரம்பாக்கம் பகுதியில் வெங்கடேஸ்வரா கேட்டரிங் இண்டஸ்ட்ரியல் சர்வீஸ் என்ற தனியார் கேட்டரிங் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் செப்டிக் டேங்கை சுத்தம் செய்யும் பணியில் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக செப்டிக் டேங்க்கின் விஷவாயு தாக்கியதில் காட்ராம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த
முருகன் ( 41), பாக்கியராஜ் (40) மற்றும் அமரம்பேடு கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (45) ஆகிய மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் பலியான மூவரின் உடலை மீட்பு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர் ஏ.எஸ்.பி.கார்திகேயன் சம்பவ விடத்தினை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு 2019ல் கூட ஸ்ரீபெரும்புதூரில் விஷவாயு தாக்கி 6 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து செப்டிக் டேங்க்கினை சுத்தம் செய்யும் பணியில் வேலை செய்யும் ஊழியர்களை எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி நிர்வாகத்தினர் ஈடுபட வைக்கின்றதால் தான் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.