செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் போலீஸ் போல் நடித்து ரூ. 10 கோடி நகை திருடிய 4 பேர் கைது
Recommended Video
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடியில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை திருட்டு வழக்கில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள அமித்திஸ்ட் என்ற நகைக்கடை சார்பில் மதுரையில் கடந்த மாதம் 26, 27 அன்று நகை மேளா மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை முடித்து விட்டு 10 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை காரில் எடுத்து கொண்டு 28-ஆம் தேதி சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே காரில் வந்த ஒரு கும்பல் நகைகளோடு வந்த காரை வழிமறித்து போலீஸார் போல் நடித்து 10 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றது. செங்கல்பட்டு தாலூகா காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
சிசிடிவி கேமரா
இந்த புகாரின் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 5 குற்றப்பிரிவு காவலர்களை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர். குற்றச் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கண்காணித்த போது முகம்மது அப்பாஸ் என்ற குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்டனர்.
கொள்ளை
அதையடுத்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியதில் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த மணிகண்டன், மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து கொள்ளையடித்தது தெரியவந்தது.
பறிமுதல்
இதில் சென்னை பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன், மணிகண்டன், ரமேஷ், முகமது அப்பாஸ் ஆகியோரை கைது செய்தனர். குற்றவாளிகளிடம் இருந்து சுமார் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
4 பேர் கைது
அது சம்மந்தமாக இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி செய்தியாளரிடம் கூறியதாவது : இந்த கொள்ளை சம்பந்தமாக கடந்த 29-ஆம் தேதி முதல் 5 சிறப்பு காவல்படை மற்றும் டிஎஸ்பி காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் அனைவரும் இரவுபகல் பாராமல் கடுமையாக உழைத்து 4 குற்றவாளிகளை பிடித்துள்ளனர்.
தொடர்பு
தற்போது 8 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள குற்றவாளிகளை தேடி வருகிறோம். விரைவில் அவர்களையும் கைது செய்து மீதமுள்ள நகைகள், பணம் உள்பட அனைத்தையும் கைப்பற்றுவோம். அதன் பிறகுதான் அமித்திஸ்ட் ஊழியர்கள் மேளாளர் தயாநிதி போன்றோருக்கு தொடர்பு இருக்கிறதா என தெரியவரும் என கூறினார்.