1300 ஆண்டுகள் பழமை.. வெண் கொற்றக் குடையுடன்.. காஞ்சிபுரம் அருகே பல்லவர் கால தேவி சிலை கண்டெடுப்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே 1300 ஆண்டுகள் பழமையான மூத்த தேவி சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
காஞ்சிபுரம் அருகே உத்தரமேரூரில் உள்ள குழம்பீசுவரர் கோயில் தெருவில் கால்வாய் அமைக்கும் பணியின் போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழங்கால மூத்த தேவி சிலை வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் அருகே உத்தரமேரூரில் குழம்பீசுவரர் கோயில் தெருவில் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அப்போது பழங்கால தேவி சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் இணைந்து, தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து, பூஜையும் செய்து வழிபட்டனர்.
இத்தகவல் உத்தரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினருக்கு தெரிந்து அவர்கள் அச்சிலையை பார்வையிட்டபோது, பல்லவர் காலத்தை சேர்ந்த மூத்த தேவி சிலை என்பதையும் உறுதி செய்தனர். சிலை சுமார் 1300 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இச்சிலையானது 4 அடி உயரமும், 2 அடி அகலமும் உடையதாக உள்ளது. வெண் கொற்றக்குடையின் கீழ், கரண்ட மகுடத்துடன் காதில் பத்ர குண்டலமும், மார்பில் அணிகலன்களும் அணிந்தும், இடுப்பில் ஆடை அணிந்து அமர்ந்த நிலையிலும் உள்ளது. வலப்புறத்தில் காக்கை உருவமும், அதன் கீழ் மகன் மாட்டுத்தலை வடிவத்துடனும் உள்ளது.
பல்லவர் காலத்தில் நந்திவர்ம பல்லவனின் குலதெய்வமாகவும் இருந்தவர். சோழர் காலத்திய வழிபாட்டிலும் தொடர்ந்த இந்த தெய்வம் வளமையின் அடையாளமாகவும் போற்றப்பட்டுள்ளார். அண்மையில் குழம்பீசுவர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் தொடங்கிய போது தங்க ஆபரணங்கள் நிரம்பிய பெட்டி ஒன்றும் இக்கோயில் அடிப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.