அத்திவரதரை தரிசிக்க வந்து கூட்ட நெரிசலில் சிக்கி ஒரே நாளில் 4 பக்தர்கள் பலி.. காஞ்சியில் பரபரப்பு
Recommended Video
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிப்பதற்காக வரிசையில் காத்திருந்த போது கூட்ட நெரிசலில் சிக்கி இரு ஆண்கள், இரு பெண்கள் என 4 பேர் பலியாகியுள்ளனர்.
காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் பிரசித்தி பெற்ற வைபவமான அத்திவரதர் தரிசனம் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். அந்த வகையில் இந்த வைபவம் கடந்த 1979-இல் நடந்தது.
அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு அத்திவரதர் குளத்தில் இருந்து எடுக்கப்பட்டார். இதையடுத்து கடந்த ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு அனந்தசயன கோலத்தில் காட்சி அளித்து வருகிறார்.
மாற்றம்
அத்திவரதர் வைபவத்துக்காக 3 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்களை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியது. இதற்காக போக்குவரத்தும் மாற்றப்பட்டுள்ளது. 48 நாட்கள் நடைபெறும் இந்த வைபவத்தை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதுவரை 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.
18ஆவது நாள்
இந்த நிலையில் இன்றைய தினமும் அத்திவரதரை தரிசிக்க கூட்டம் அலைமோதியது. 18 ஆவது நாள் வைபவமான இன்று அத்திவரதர் கத்திரிப்பூ நிற பட்டாடையில் அருள்பாலித்தார். இன்று ஒரே நாளில் 2 லட்சம் பக்தர்கள் காஞ்சிபுரத்தில் திரண்டனர்.
காயம்
அப்போது கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. ஒரு கட்டத்தில் மக்கள் முந்திக் கொண்டு செல்ல முயன்றதால் கூட்ட நெரிசலில் ஏராளமானோர் சிக்கினர். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னையைச் சேர்ந்த நாராயணி (55), நடராஜன் (61), ஆந்திரத்தைச் சேர்ந்த கங்காலட்சுமி (47), சேலத்தைச் சேர்ந்த ஆனந்தவேல் (50) ஆகிய 4 பேர் பலியாகிவிட்டனர்.
யார் யார் பலி
கடந்த 3-ஆம் தேதி அனுமதியிருந்தும் ஷேர் ஆட்டோவை கோயில் அருகே போலீஸார் அனுமதிக்கவில்லை என கூறிய ஷேர் ஆட்டோ ஓட்டுநர் குமார் தீவைத்து தற்கொலை செய்து கொண்டார். அது போல் அன்றைய தினமே அத்திவரதர் தரிசனத்துக்கு வந்த ஆந்திர மாநில இளைஞர் சக்தி, சுவாமியை போட்டோ எடுக்க முயன்ற போது போலீஸார் தாக்கியதால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. எனவே அத்திவரதரை தரிசிக்க வந்த இடத்தில் இதுவரை 6 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.