ஏலக்காய் மாலை மணம் வீச.. இளஞ்சிவப்பு பட்டுடுத்தி... அருள்பாலிக்கிறார் அத்தி வரதர்
Recommended Video
காஞ்சிபுரம்: அத்தி வரதர் இன்று இளஞ்சிவப்பு பட்டுடுத்தி, ஏலக்காய் மற்றும், தாமரை, செண்பகப் பூ மாலைகள் அலங்காரத்தில் தரிசனம் அளித்து வருகிறார்.
வரதராஜ பெருமாள் கோவிலின் தெப்பக்குளத்தில் வைக்கப்படும் அத்தி வரதர் சிலை, 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியில் எடுக்கப்பட்டு, 48 நாட்களுக்கு பூஜை செய்யப்படும். பின்னர் மீண்டும் அத்தி வரதர் சிலை நீருக்கடியில் வைக்கப்படும்.
ஜூலை 1ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த உற்சவத்தின் 16வது நாளான இன்று அத்திவரதர் இளஞ்சிவப்பு நிற பட்டு உடுத்தி காட்சி தந்து கொண்டிருக்கிறார். ஏலக்காய் மாலை, தாமரைப்பூ மாலை, செண்பகப்பூ மாலை உள்ளிட்டவை அணிவித்து, நெய்வேதியம் செய்து அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
அதிகாலை முதலே ஆயிரக்கணக்கில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்து வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் மட்டும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளதாகவும், 15 நாட்களில் சுமார் 18 லட்சத்து 50 ஆயிரம் பேர் தரிசித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றும் அதிகாலை முதலே 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காத்திருக்கிறார்கள் என்றும், அத்திவரதரை தரிசிக்கும் பக்தர்களின் எண்ணிக்கை இன்றும் ஒரு லட்சத்தைத் தாண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழக அமைச்சர் பாஸ்கரன், கனிமொழி எம். பி-யின் தாயார் ராஜாத்தி அம்மாள், நடிகர் ராதா ரவி உள்ளிட்டோர், அதிகாலையில் தரிசனம் செய்னர். வெயில் சுட்டெரிப்பதால் பக்தர்கள் நிற்குமிடத்தில் தற்காலிக மேற்கூரை அமைக்கப்பட்டு வருவதுடன், 500 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் குடிநீர் வழங்கி உதவும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.