ஆடிப்பூரம் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்குள் விழா நடத்த அனுமதி - தங்கத்தேர் ஓடும்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழாவை கோவிலுக்கு உள்ளேயே நடத்தவும் தங்கத்தேர் இழுக்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்: பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக போற்றப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவை கோவிலுக்குள் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. ஆடிப்பூர தேரோட்டத்தையொட்டி வரும் 24 ஆம் தேதி ஆண்டாள் கோவிலில் தங்க தேர் இழுக்கவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசி வனத்தில் ஆண்டாள் அவதரித்தார். அந்த கண்ணனை காதலனாக பாவித்து இறைவனின் திருவடி சேர்ந்தார். ஆண்டுதோறும் ஆடிப்பூர விழா ஸ்ரீவில்லிபுத்தூரில் கோலாகலமாக நடைபெறும். தேரோட்டமும் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலால் திருவிழா நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.
கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கோவில்கள் மூடப்பட்டதால் கடந்த சில மாதங்களாக எந்த பெரிய விழாக்களும் நடைபெறவில்லை. கோவிலுக்குள் சாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் மட்டும் தடையின்றி நடைபெற்று வருகின்றன.
தற்போது சிறுகோவில்கள் மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆண்டாள் கோயிலில் நடைபெறும் புகழ்பெற்ற திருவிழாவான ஆடிப்பூர தேரோட்ட திருவிழாவை தடையின்றி நடத்த அனுமதிக்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் அறநிலையத் துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஆடிப்பூர திருவிழாவில் 10 முதல் 20 பேர் வரை மட்டுமே கலந்து கொண்டு பூஜைகளை செய்யவும் கோவிலுக்கு உள்ளேயே ஒன்பது நாள் திருவிழாவை நடத்தவும் 24ஆம் தேதி தங்கத்தேர் இழுக்கவும் அனுமதிக்கக் கோரி கோயில் நிர்வாகம் சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது.
சீனாவும் ஈரானும் ஒன்று சேர்ந்து போடும் ஒப்பந்தம்.. இந்தியாவிற்கு என்ன பாதிப்பு?
அந்த கடிதத்திற்கு இந்து சமய அறநிலையத்துறையிடம் இருந்து பதில் வந்துள்ளது. அந்த கடிதத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூர தேரோட்டத்தையொட்டி வரும் 24 ஆம் தேதி ஆண்டாள் கோவிலில் தங்க தேர் இழுக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. விழாவில் கோயில் வளாகத்திற்குள்ளேயே தங்கத் தேரை இழுக்க தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி அனுமதி வழங்கியுள்ளார். பக்தர்கள் இன்றி 9 நாட்கள் திருவிழாவை அர்ச்சகர் மட்டும் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும், தேரோட்டக் காட்சிகள் யூ டியூப் இணையம் மூலம் நேரலை செய்யப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. ஆடிப்பூரம் விழா நடத்த அனுமதி கிடைத்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.