கண்கொள்ளாக் காட்சி.. நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் அத்திவரதர்.. பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது
Recommended Video
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்திவரதரின் சயனகோலம் நிறைவு பெற்றதையடுத்து இன்று முதல் நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார்.
அதிகாலை முதலே பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. நின்ற கோலத்தில் அத்திவரதரை தரிசிக்க சராசரியாக ஒரு நாளைக்கு 3 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1-ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த ஜூலை ஒன்றாம் தேதியிலிருந்து ஜூலை 31-ம் தேதி வரை அத்தி வரதர் சயன திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
ஒரு நாளைக்கு சராசரியாக 2 லட்சத்திலிருந்து 3 லட்சம் வரை பக்தர்கள் சயன கோலத்தில் அருள்பாலித்த அத்தி வரதரை தரிசனம் மேற்கொண்டுனர்.கடந்த 31 நாட்களில் ஏறத்தாழ 48 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் மேற்கொண்டுள்ளனர். இன்று காலை சரியாக 5:25 மணிக்கு நின்ற திருக்கோலத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அமைதியாக வரிசையில் நின்று அத்திவரதரை தரிசனம் செய்தனர்.
பல்வேறு வசதிகள்
இனி வரும் நாட்களில், பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் என்பதால், பக்தர்களுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் அன்னதானம்
மருத்துவ வசதி, கழிவறை வசதி, குடிநீர் வசதி என அனைத்துமே இரட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் இருக்கக்கூடிய காலி இடங்களில் 10,000 பக்தர்கள் தங்குவதற்கு உண்டான தற்காலிக கூடாரங்கள் 6 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் 24 மணி நேரம் அன்னதானமும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதிகரிப்பு
மேலும் காவலர்களின் எண்ணிக்கை 5,000 இருந்து 7,500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 31 நாட்களில் காஞ்சிபுரம் நகருக்குள் ஏறத்தாழ 7 லட்சத்திற்கும் அதிகமான வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில வாகனங்கள் வந்துள்ளன. அத்தி வரதரை தரிசிக்க கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.