அத்தி வரதரை விரைவாக தரிசிக்க விரும்புவோருக்காக.. புதிய அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு
காஞ்சிபுரம்: ரூ.300 கட்டணத்தில் அத்தி வரதரை இனி தினமும் 2 ஆயிரம் பேர் தரிசிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை அக்கோயிலின் மூலவரான அத்தி வரதர் எழுந்தருளும் வைபம் கடந்த ஜுலை 1ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வரும் ஆகஸ்ட் 16 ம் தேதி வரை நடக்கிறது.
தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் வந்து அத்தி வரதரை தரிசனம் செய்து வருகிறார்கள். பொது தரிசனம் செய்ய பல மணி நேரம் பொதுமக்கள் காத்துக்கிடக்கிறார்கள்.
இதன்காரணமாக ரூ.300 கட்டணத்தில் அத்தி வரதரை தரினம் செய்யும் நடைமுறையும் காஞ்சிபுரத்தில் உள்ளது. இதன்படி இதுவரை தினமும் 500 பேரை அத்தி வரதரை தரிசனம் செய்து வந்தார்கள். ஆனால் ஆன்லைனில் சில நிமிடங்களிலேயே 300 விரைவு தரிசன டிக்கெட் தீர்ந்துவிடுகிறது.
இதையடுத்து 2000 பேர் வரை தினமும் ரூ.300 கட்டணத்தில் அத்தி வரதரை விரைவாக தரிசனம் செய்யலாம் என இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது. ஆனால் ஆன்லைனில் ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் பெற்றவர்கள் மாலை 6 மணி முதல் 9.30 வரை தரிக்கலாம் என்று மாற்றப்பட்டுள்ளது.
முன்னதாக அத்தி வரதரை தரிசிக்க கடந்த வியாழக்கிழமை கட்டுங்கடங்காகத அளவில் பொதுமக்கள் வந்த காரணத்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிகளை கண்காணிக்க, இரண்டு, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.