காஞ்சிபுரத்தில் விழா கோலம்... அத்திவரதரை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பச்சை நிற ஆடையுடன் காட்சியளிக்கும் அத்திவரதரை மூன்றாம் நாளான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய குவிந்தனர்.
ஆகஸ்ட் 17-ம் தேதி வரை 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு காட்சியளிக்கும் அத்தி வரதர், 30 நாட்களுக்கு சயன கோலத்திலும், அதைத் தொடர்ந்து 18 நாட்கள் நின்ற கோலத்திலும் அருள் பாலிப்பார். காஞ்சிபுரத்தில் மூன்றாம் நாளான இன்று பச்சை நிறத்துடன் காட்சியளிக்கிறார். காஞ்சிபுரத்தில் உள்ள தேவராஜ சுவாமிகள் திருக்கோவில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். உலகப் பிரசித்தி பெற்ற ஆதி அத்தி வரதர் நிகழ்வு நேற்று முன் தினம் தொடங்கியது.
முதல் நாளில் 1 லட்சம் பக்தர்களூம் இரண்டாம் நாளில் 75 ஆயிரம் பக்தர்களும் தரிசனம் செய்த நிலையில் இன்றும் நீண்ட வரிசையில் பக்தர்கள் தரிசனத்துக்கு காத்திருக்கின்றனர்.
எனினும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் எந்த வித சிரமும் இன்றி பக்தர்கள் எளிதாகவும் விரைவாகவும் தரிசனம் செய்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே மாற்றுத் திறனாளிகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட நடக்க முடியாதவர்கள் வீல்சேர் மூலம் சென்று தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. சிறப்புமிக்க அத்தி வரதரை காண்பதற்காக உள்ளுர் வெளியூர் உள்ளிட வெளிமாநிலத்தில் இருந்து பக்தர்கள் காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலுக்கு வந்த வண்ணமே உள்ளனர்.
அத்திவரதர் முதல் நாளன்று மஞ்சள் நிற ஆடையும் இரண்டாம் நாள் நேற்று நீலநிற ஆடையும் மூன்றாம் நாள் இன்று பச்சை நிற ஆடையும் அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். தினந்தோறும் அதிகாலை 5 மணி அளவில் சுப்ரபாதம் பாடலுடன் எழுந்து, அதன்பின் திருவாராதனை மற்றும் நெய்வேதியம் முடிந்தவுடன் புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு 6 மணி முதல் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா. பொன்னையா மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி, மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சுந்தரமூர்த்தி மற்றும் ஏராளமான அரசு அதிகாரிகள் என அனைவரும் சிறப்பான முறையில் அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்து பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் தரிசனம் செய்ய வழிவகை செய்துள்ளனர்.