அத்திவரதர் தரிசனம்.. முதியவர்களுக்கு பழச்சாறு வரிசையில் நிற்பவர்களுக்கு நாற்காலி.. தலைமைசெயலர்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதரை தரிசிக்க வரிசையில் நிற்பவர்கள் ஓய்வெடுக்க நாற்காலிகள் போட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தலைமைச்செயலர் சண்முகம் கூறியுள்ளார்.
சுமார் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1 முதல் நடைபெற்று வருகின்றது.ஆகஸ்ட் 17 வரை இந்த வைபவம் நடக்கிறது. இதனை காண தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அத்திவதரை தரிசிக்க வருபவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தருவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைச்செயலாளர் சண்முகம் அத்திவரதரை காண வரும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பேட்டரி வாகனங்களை முறையாக இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. மருத்துவ குழுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தளர்ச்சியுடன் வரும் முதியவர்களுக்கு பழச்சாறு வழங்கப்படும்.
பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். அத்திவரதர் உற்சவத்திற்கு பக்தர்களின் வருகை அதிகரிப்பால் கூடுதலாக கூடாரம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதே போல துப்புறவு தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் ஊர்காவல் படையை சேர்ந்த 1000 பேர் பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுவர். மேலும் முக்கிய தினங்களில் தரிசனத்தை காலை ஒரு மணி நேரம் முன்னதாக துவக்க முடியுமா என்பது பற்றியும் ஆலோசித்து வருகிறோம் என்றார்.
பின்னர் பேசிய டிஜிபி திரிபாதி அத்திவரதர் வைபவத்திற்காக 5,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் உள்ளனர். மேலும் கூடுதல் தன்னார்வலர்கள் உதவி செய்ய அழைப்பு விடுப்பதாகவும் கூறினார்.