பக்தர்கள் கவனத்திற்கு... அத்தி வரதரை தரிசிப்பதற்கான நேரம் ஒரு மணி நேரம் குறைப்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அத்திவரதர் உற்சவ தரிசன நேரம், நிர்வாக காரணங்களால், ஒரு மணிநேரம் குறைக்கப்பட்டுள்ளது. காலை 5 மணியிலிருந்து இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா கடந்த 1-ந்தேதி தொடங்கி விமரிசையாக தொடங்கியது. 40 ஆண்டுகளுக்கு பின், இந்த வைபவம் நடைபெறுவதால், அத்தி வரதரை தரிசிக்க, உள்ளூர், வெளியூர் பக்தர்கள் அன்றாடம் ஆயிரக்கணக்கில் வருகின்றனர்.
14-வது நாளாக இன்று அத்திவரதர் தரிசனம் நடைபெற்று வருகிறது. அத்திவரதருக்கு நீல நிற பட்டாடையில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு ஒரு மணி வரை தரிசனம் நடைபெற்ற நிலையில், நேற்று மட்டும் இரண்டு லட்சத்து 80 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர். இன்று அதிகாலை முதலே 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.
வரிசையில் நிற்பவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர் மூலம் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து கோவிலுக்கு ஏற்கனவே 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் இன்றுமுதல் கூடுதலாக 10 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
நேரத்தை வேஸ்ட் பண்ணாதீங்க.. உடனே பதவி விலகனும்.. குமாரசாமியை நெருக்கும் எடியூரப்பா
பக்தர்களின் கூட்டம் அலைமோதுவதால், அத்தி வரதர் வைபவம் துவங்கிய நாள் முதல், தரிசனம் தொடர்பான நடைமுறைகள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகிறது. முதல் நாளே, 50 ரூபாய் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, உள்ளூர் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு அனுமதியும் ரத்து செய்யப்பட்டது.
பின்னர், அத்திவரதரை தரிசிக்க காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை இருந்த தரிசன நேரம் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டது. இந்தநிலையில், நிர்வாக காரணங்களால், ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டு 9 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.