40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் திருவிழா.. காஞ்சியில் ஏற்பாடுகள் தீவிரம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோயில் அத்தி வரதர் திருவிழாவையொட்டி, முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
காஞ்சிபுரத்தில் திவ்ய தேசங்களில் ஒன்றான 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வரதராஜப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் இருக்கும் அத்தி வரதர், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம்.
இதற்கு முன் கடந்த 18.8.1854, 13.6.1892, 12.7.1937, 2.7.1979 ஆகிய தேதிகளில் அத்தி வரதரை தரிசனம் செய்யும் உற்சவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது
சராசரியாக 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே அத்தி வரதர் நீரிலிருந்து வெளியே எடுத்து வரப்பட்டு காட்சியளிக்கிறார் என்பதால், ஒவ்வொருவரும் அவரது ஆயுள்காலத்திற்குள் ஒருமுறை, அல்லது அதிகபட்சம் இருமுறை மட்டுமே அத்தி வரதர் பெருமாளை தரிசிக்க முடியும்.
இதன்படி 40 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை 48 நாட்களுக்கு அத்தி வரதர் பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.
வரதராஜப் பெருமாள் கோயிலின் 100 கால் மண்டபத்தின் அருகில் தண்ணீருக்கு அடியில் உள்ள 4 கால் மண்டபத்தில் தன்னை மறைத்துக்கொண்டு பக்தர்களின் எண்ணத்தோடு அத்தி வரதர் அருள்பாலித்து வருகிறார். இக்குளத்தில் எப்போதும் நீர் வற்றுவதில்லை என்பதால் அத்தி வரதர் யார் கண்ணுக்கும் புலப்படமாட்டார்.
பெருமாளின் திருமேனி மிகப்பெரிய அத்தி மரத்தால் வடிவமைக்கப்பட்டு, பிரம்மதேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அத்தி வரதப் பெருமாளை வெள்ளித்தகடு பதித்த பெட்டியில் சயனக் கோலத்தில் வைத்து, அனந்த புஷ்கரணி மண்டபத்தின் நடுவே நீரில் வைத்துள்ளனர்.
இந்நிலையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை 48 நாட்கள், அத்தி வரதர் திருவிழா நடைபெற உள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பொன்னையா, பொதுமக்கள் தரிசனத்திற்கு கிழக்கு ராஜகோபுரம் வழியே வந்து, மேற்கு ராஜகோபுரம் வழியே தரிசனம் முடித்து விட்டு வெளியே செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
அத்தி வரதர் திருவிழாவையொட்டி காஞ்சி நகர் முழுவதும் சிசிடிவி கேமரா வளையத்திற்குள் கொண்டு வர நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. நகர்புற பகுதிகளில் உள்ள அனைத்து முக்கிய இடங்களையும் கண்காணிப்பு கேமரா வளையத்திற்குள் கொண்டு வர திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.
அதே போல திருவிழா நடைபெற உள்ள 48 நாட்களுக்கும், பேருந்து நிலையங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான பக்தர்கள் வர வாய்ப்பு உள்ளதால் காஞ்சிபுரத்தில் செயல்படும் பள்ளிகளின் நேரமும் மாற்றியமைக்கப்பட உள்ளது. காலை 8.30 முதல் 1.30 வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக, 5 மொழிகளில் அறிவிப்பு பலகைகளை வைக்க திட்டமிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.