நாளை முதல் நின்ற கோலத்தில் அத்திவரதர்.. அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரம்
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவில் உற்சவத்தின் 31-வது நாளான இன்று மஞ்சள் நிற பட்டாடையில் அத்திவரதர் காட்சியளிக்கிறார். அதிகாலை முதலே பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.
அத்திவரதர் சயன கோலத்தில் காட்சியளிப்பது இன்றுடன் கடைசி நாளாகும். நாளை முதல் வரும் 17-ம் தேதி வரை அத்தி வரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, இன்று (ஜூலை 31) பொது தரிசனத்தில் நுழைவுவாயில் நண்பகல் 12 மணி அளவில் மூடப்படுகிறது.
அதன்பின்னர் கோயில் வளாகத்திற்குள் இருக்கக்கூடிய பக்தர்கள் மட்டும் மாலை 5 மணிவரை தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் விஐபி வரிசையில் வரக்கூடிய பக்தர்கள் மாலை 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இந்து அறநிலையத் துறை சார்பாக ஏற்படுத்தப்பட்டு இருக்கக்கூடிய ஆன்லைன் பாஸ் வைத்திருப்பவர்கள் நண்பகல் 12 மணியிலிருந்து மதியம் 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
நாளை (ஆகஸ்ட் 1) வழக்கம் போல் காலை 5 மணியிலிருந்து அத்திவரதர் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பக்தர்களின் கூட்டம் அலைமோதும் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.