அத்திவரதர் தரிசனத்துக்கு ஆதார் அவசியம்- கோவிலை சுற்றி கழிவறைகள்- கண்காணிப்பு கேமராக்கள்!
Recommended Video
காஞ்சிபுரம்: காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சி தரும் அத்திவரதரை தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக உள்ளூர் பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க ஆதார் அட்டை அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரதராஜ பெருமாள் கோவில் அனந்தசரஸ் குளத்தில் இருக்கும் அத்திவரதர் சிலை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்கள் தரிசனத்துக்கு வெளியே எடுக்கப்படும். அத்திவரதர் மொத்தம் 48 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தருவார். இதில் சயனகோலத்தில் 30 நாட்கள்; நின்ற கோலத்தில் 18 நாட்களாகும்.
அத்திவரதரை இலவசமாகவும் தரிசிக்கலாம்; ரூ50, ரூ500 கட்டணங்களிலும் தரிசனம் செய்யலாம். உள்ளூர் பக்தர்களுக்கும் வெளியூர் பக்தர்களுக்கும் தரிசனத்துக்காக தனித்தனிநேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்திவரதரை காண ஆதார் அவசியம்
ஜூலை 1-ந் தேதி முதல் 26-ந் தேதி உள்ளூர்வாசிகள் மாலை 5 மணி முதல் 8 மணி வரை அத்திவரதரை தரிசனம் செய்யலாம். ஆனால் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை உள்ளூர்வாசிகள் காண்பித்தால்தான் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். அதுவும் 12 வயதுக்குட்பட்டோருக்கு விதிவிலக்காம்.
கட்டணத்துடன் தரிசனம்
உள்ளூர் பக்தர்களுக்கு ஒதுக்கப்பட்ட 26 நாட்களைத் தவிர பிற நாட்களில் வெளியூர் பக்தர்கள் மாலை நேரத்தில் தரிசனம் செய்யலாம். மேலும் பொது தரிசனத்துக்கு ரூ50ம், விஐபி தரிசனத்துக்கு ரூ500ம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக 14 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதற்கான நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை என ஒதுக்கப்பட்டுள்ளது.
ரூ.10 பேருந்து கட்டணம்
அத்திரவரதர் தரிசனத்தை முன்னிட்டு தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது இங்கிருந்து 20 மினி பேருந்துகள் கோவிலுக்கு இயக்கப்படும். இப்பேருந்துகளில் நபர் ஒருவருக்கு ரூ10 கட்டணம்.
கோவில் கழிப்பறைகள்
மேலும் வரதராஜ பெருமாள் கோவிலைச் சுற்றியும் 4 மாட வீதிகளிலும் 22 தற்காலிக கழிப்பறைகளும் பக்தர்கள் வசதிக்காக அமைக்கப்பட்டு இருக்கின்றன. இதே பகுதிகளில் 100 மீட்டர் தொலைவுக்கு ஒரு சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.