இன்று ஆண்டாளுக்கு திருக்கல்யாணம்.. அத்திவரதர் தரிசனம் நேரத்தில் மாற்றம்!
காஞ்சிபுரம்: ஆடிப்பெருக்கையொட்டி இன்று ஆண்டாளுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதனால் அத்திவரதர் தரிசனம் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் தொடங்கியது. இந்த வைபவம் வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. கடந்த ஜூலை 1 முதல் அனந்தசயன கோலத்தில் காட்சி அளித்த அத்திவரதர் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.
இதுவரை 43 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இன்று ஆடிப்பெருக்கும் ஆடிப்பூரமும் கொண்டாடப்படுகிறது. இதனால் வரதராஜ பெருமாள் கோயிலில் அம்பாளுக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடைபெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை செய்ய வசதியாக பிற்பகல் 2 மணிக்கு கிழக்கு கோபுர வாசல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்திவரதர் தரிசனம் மாலை 5 மணியுடன் நிறுத்தப்படுகிறது. திருக்கல்யாணத்துக்கு பிறகு இரவு 8 மணி முதல் 10 மணி வரை தரிசனம் நடைபெறும் என மாவட்டம் நிர்வாகம் அறிவித்துள்ளது.