பாஜகவுக்கான தூதுவராக ஜெ.வுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்த தமிழகம் வந்த ஜஸ்வந்த்சிங்
சென்னை: பாரதிய ஜனதா கட்சிக்கான தூதராக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் முக்கியப் பங்காற்றியவர் மறைந்த முதுபெரும் பாஜக தலைவர் ஜஸ்வந்த்சிங்.
வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசை 1999-ல் அதிமுகதான் கவிழ்த்தது. அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுக அரசை கலைக்க வேண்டு என்று ஜெயலலிதா கொடுத்த அழுத்தத்தை பிரதமராக இருந்த வாஜ்பாய் ஏற்க மறுத்தார். இதனால் வாஜ்பாய் அரசு கவிழ்க்கப்பட்டது.
பாஜகவை வலுப்படுத்தியவர்களில் முக்கியமானவர் ஜஸ்வந்த் சிங்.. வாழ்க்கை வரலாறு
பாஜக தூதர் ஜஸ்வந்த்சிங்
இதன்பின்னர் பாஜகவிடம் இருந்து சில காலம் அதிமுக விலகி இருந்தது. ஆனால் மீண்டும் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையேயான நெருக்கத்தை உருவாக்கியதில் மிக முக்கிய பங்குவகித்தவர் ஜஸ்வந்த்சிங்தான்.
ஜெ.வுடன் சந்திப்பு
2007-ல் ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் ஆதரவுடன் பைரன்சிங் ஷெகாவத் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவு கோரி தமிழகம் வந்த ஜஸ்வந்த்சிங், ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்.
நம்பியார் இல்ல சந்திப்பு
2008-ம் ஆண்டு ஜெயலலிதா 60-வது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ. நடிகர் எம்.என்.நம்பியார் உள்ளிட்ட 7 பிரபலங்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று ஜெயலலிதா வாழ்த்து பெற்றார். நம்பியார் இல்லத்துக்கு சென்ற போது அங்கு ஜஸ்வந்த்சிங்கை ஜெயலலிதா சந்தித்து பேசியதாக பரபரப்பு நிலவியது.
ஜஸ்வந்த்சிங்குக்கு அதிமுக ஆதரவு
ஏனெனில் நம்பியாரின் மகன் சுகுமாரன் அப்போது பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தார். ஆனால் இந்த தகவல்களை ஜெயலலிதா அப்போதே திட்டவட்டமாக மறுத்தும் இருந்தார். பின்னர் 2012-ல் துணை ஜனாதிபதி பதவிக்கு ஜஸ்வந்த்சிங் போட்டியிட்ட போதும் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவை கோரியிருந்தார். அப்போது ஜஸ்வந்த்சிங்கை அதிமுக ஆதரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.