அமைச்சர் சேகர்பாபுவுக்கு தகுதி வேண்டும்.. கொந்தளிக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை
காஞ்சிபுரம்: காவல்துறை தலைவருக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு, இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு முதலில் தகுதி வேண்டும் என பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை கடும் விமர்சித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள கோவில் வளாகத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியை காணொளியில் காணும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அவர், பின்னர் பிரதமரின் வாரணாசி நிகழ்ச்சியை காணொளி மூலம் கட்சித் தொண்டர்களுடன் அமர்ந்து பார்வையிட்டார்.

உரத்தட்டுப்பாடு இல்லை
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை, மாநில அரசு பெயரளவிற்கு மட்டுமே விவசாயத்திற்கு தனியாக பட்ஜெட் போட்டிருக்கிறார்கள் எனவும் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் கடந்த 7 ஆண்டுகளில் உரத்திற்கு தட்டுப்பாடு என்பது எதுவும் ஏற்படவில்லை எனவும், எனவே மாநில அரசு மத்திய அரசு மீது புகார் அளிப்பதை தவிர்த்து மாநில அரசு விவசாயிகளுக்காக என்ன செய்திருக்கிறது உரத்திற்காக மானியம் வழங்கி இருக்கிறார்கலா என்பதை சிந்திக்க வேண்டும் என்றார்.

இந்துசமய அறநிலையத்துறை நாடகம்
மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும் கவர்ச்சிகரமாக பட்ஜெட்டை மட்டும் போட்டுவிட்டு மத்திய அரசு எல்லாம் செய்து விடும் என எதிர்பார்க்கிறார்கள் பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் விஷயத்தில் இந்து அறநிலைத்துறை நாடகமாடுகிறது எனக் கூறிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, யாரெல்லாம் கடவுளை நம்பி ஆன்மிகத்தை நம்பி கோவிலில் சாமி தரிசனம் செய்ய விரும்புகின்றார்களோ அவர்களுக்கு நமது நம்பிக்கையில் நிச்சயமாக இடம் இருக்கிறது அதை தடுத்து நிறுத்துவதற்கு யாருக்கும் அருகதை கிடையாது என்றார்.

வேலையில்லாமல் உள்ளனர்
சிபிஎஸ்இ தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய பதிலளித்த அண்ணாமலை, இந்தியாவில் இரண்டு பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள், ஒன்று காங்கிரஸ்காரர்கள் மற்றொன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றார். வேலை இல்லாதவர்கள் சொல்வதை சீரியசாக எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும் கூறினார். பாரபட்சம் இல்லாமல் திமுக உறுப்பினர்கள் யாரெல்லாம் தவறு செய்து இருக்கிறார்களோ அவர்கள் மீது நாளை எப்ஐஆர் பதிவு செய்தால் காவல்துறை தலைவரை முதல் ஆளாய் வரவேற்பது பாரதிய ஜனதா கட்சிதான் எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.

பேசுவதற்கு தகுதி வேண்டும்
இந்து அறநிலை துறை அமைச்சர் கட்சி மாறி இன்னொரு கட்சிக்கு வந்து வெள்ளை கலர் சட்டை அணிந்து நெற்றியில் பட்டை அடித்துக் கொண்டால் அவரின் பழைய வரலாறு மக்கள் மறந்து விடுவார்களா என்ன? எனக் கேள்வி எழுப்பிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் வாய்க்கு வந்ததை பேசக்கூடாது எனவும், காவல்துறை தலைவரை ஆதரித்து பேசுவதற்கு தகுதி வேண்டும் சட்டத்தை மதிப்பவர் ஆக சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவராக இருக்க வேண்டும் ஆன்மீகம் வேஷம் போட்டு கொள்ள கூடாது என்றார்.