அன்புமணி பகீர் பேச்சு.. கொதிக்கும் எதிர்க்கட்சிகள்.. பாய்கிறது வழக்கு.. கலெக்டர் உத்தரவு
Recommended Video
காஞ்சிபுரம்: வாக்குச்சாவடிகளை அபகரிக்க தூண்டும் வகையில், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாக, புகார் எழுந்த நிலையில், வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலையும், திருப்போரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகத்தையும் ஆதரித்து திருப்போரூர் பேருந்து நிலையம் அருகில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
அப்போது, எதிரணியில் உள்ள திமுகவினரிடம் சில ஆயிரம் வாக்குகள் மட்டுமே இருக்கிறது என்றார்.
புரிகிறதா
மேலும் திமுகவின் கூட்டணி கட்சிகள் எதற்கும் ஓட்டு கிடையாது. அப்போது தேர்தலில் என்ன நடக்கும்? பூத்ல என்ன நடக்கும்? பூத்ல நாமதான் இருப்போம்? சொல்றது புரியுதா, இல்லையா? நாமதான் இருப்போம், நாமதான் இருப்போம். அப்பறம் என்ன? சொல்லணுமா வெளியில, புரிஞ்சுகிட்டிங்கள்ல.. என்று நமட்டு சிரிப்புடன் கூறினார்.
திமுக புகார்
அன்புமணியின் இந்த பேச்சு மிகுந்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சிக்கு செல்லும் வாக்குகளை செல்லவிடாமல் தடுக்கும் வகையில் அன்புமணி பேச்சு அமைந்துள்ளது. வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் நோக்கத்தில் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சை பேச்சுத்தான்
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான, பொன்னையா, இன்று நிருபர்களிடம் கூறியதாவது: அன்புமணி பேசியது சர்ச்சையான பேச்சு என்று திருப்போரூர் தேர்தல் அலுவலர் புகாராக எங்களிடம் அளித்துள்ளார். அதற்கான மேல் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளார் என்றார்.
காவல் நிலையம்
மேலும், பொன்னையா கூறுகையில், புகார் எந்த அடிப்படையிலானது என்பதை பார்த்து முடிவு செய்துகொண்டு, காவல் நிலையத்தில் புகார் அளிப்பதா வேண்டாமா என்பதை முடிவு செய்வார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.