அடுத்த வாரத்தில் இருந்து.. அத்தி வரதர் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பார்.. முதல்வர் பழனிசாமி பேட்டி
Recommended Video
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் எழுந்தருளியுள்ள அத்திவரதரை இடமாற்றம் செய்யும் விவகாரத்தில் ஆகம விதிமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் தரிசன உற்சவ நிகழ்ச்சி ஜூலை ஒன்றாம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அத்திவரதர் தரிசன உற்சவம் நடைபெறும் என்பதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரம் சென்று அத்திவரதரை நேற்று தரிசனம் செய்தார். முன்னதாக, கோயிலுக்கு வெளியே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
அதன்பின் வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அத்திவரதரை தரிசித்தபோது, அவரது பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பின், நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அன்னதானம் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, ஆய்வு மேற்கொண்ட பின் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது: ஆகஸ்டு 1-ம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார் என்றார். இதுவரை 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசித்து சென்றுள்ளதாக குறிப்பிட்ட அவர், பக்தர்கள் வசதிக்காக 1,250 சக்கர நாற்காலிகள் பயன்படுத்தப்படும்.
அத்திவரதர் தரிசனத்திற்காக இதுவரை 3.41 லட்சம் வாகனங்கள் காஞ்சிபுரம் வந்துள்ளன. நிழற் கூடம், மருத்துவ முகாம், காவல் உதவி மையங்கள் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.