ஸ்ரீபெரும்புதூர் ஆதி கேசவ பெருமாளை தரிசித்த கையோடு ஸ்டாலினுக்கு எதிராக அனலை கக்கிய முதல்வர்
ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். ஆதி கேசவ பெருமாளை தரிசித்த கையோடு பிரச்சாரத்தை ஆரம்பித்த முதல்வர் பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலினை வெளுத்து வாங்கினார்.
வாழையடி வாழையாக அவர்கள் குடும்ப அரசியல் நடத்தி வருகிறார்கள். அப்பாவின் செல்வாக்கின் மூலம் சட்டமன்ற உறுப்பினரானார் ஸ்டாலின். ஆனால் நான் என் தொகுதியில் சேவல் சின்னத்தில் நின்று சட்டமன்ற உறுப்பினரானேன்.
சாதாரண குடும்பத்தில் பிறந்து உயர்ந்த பதவிக்கு வரவேண்டும் என்றால் அதற்கு எப்படி உழைக்க வேண்டும் என்று எண்ணிப்பாருங்கள் என்று கேட்டார் முதல்வர்.
சொத்துக்கு மேல் சொத்துக்கள் சேர்ப்பதற்காக பதவியைத் தேடி அலைந்து வருகிறார் ஸ்டாலின். அதிமுகவில் மட்டும் தான் ஒரு தொண்டன் கூட முதல்வராக முடியும். திமுகவில் அப்படி கிடையாது; கருணாநிதிக்குப் பிறகு அவரது மகன் ஸ்டாலின் தான் முதல்வராக நினைக்கிறார். ஆனால் அவரால் வர முடியாது. அவருக்கு பின்பு உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார் என்று கூறினார்.
அதிமுகவில் யார் கட்சிக்காக உழைக்கிறார்கள் அவர்களே பதவிக்கு வர முடியும். அதற்கு நானே உதாரணம். ஜனவரி 27 க்குப் பிறகு என் ஆட்சி இருக்காது என்று ஸ்டாலின் கூறுகிறார்; ஆனால் அதன்பிறகும் என் ஆட்சி இருக்கும் என்றார்.
மு.க. அழகிரி கட்சி துவங்கினால் கண்டிப்பாக திமுக உடையும். அப்போது ஸ்டாலினும், திமுகவும் காணாமல் போவார்கள் என்றும் ஆருடம் சொன்னார் முதல்வர் பழனிச்சாமி.
தயாநிதிமாறன் தேர்தல் சமயத்தில் தான் மக்களை சந்திப்பார். அதன்பிறகு அவரை நம்மால் பார்க்க முடியாது .திமுக எம்பி ஜெகத்ரட்சகன் சுமார் 25 ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரர். தமிழகத்தில் போடப்படும் பட்ஜெட்டில் எட்டில் ஒரு பாகம் அவரது சொத்துக்கள் மட்டும்தான் என்றும் வெளுத்து வாங்கினார்.
மசூதியில் இருந்து "பாங்கு" சத்தம்.. டக்கென பேச்சை நிறுத்திய எடப்பாடியார்.. காஞ்சி தேரடியில்!
முதல்வர் தான் பிரச்சாரத்தில் செல்லும் இடங்களில் எல்லாம் அங்குள்ள பிரபல கோவில்களில் சாமி தரிசனம் செய்து விட்டு பிரச்சாரம் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ள முதல்வர் பழனிச்சாமி, இன்றைய தினம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்றைய தினம் பிரச்சாரத்தை ஆரம்பித்த போது ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பிரபல கோவிலான ஆதி கேசவ பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
வாலாஜாபாத் பகுதியில் பிரச்சாரம் செய்த போது தொழுகைக்காக ஒலி எழுப்பப்பட்டது. அப்போது முதல்வர் பழனிச்சாமி சில நிமிடங்கள் பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருந்து விட்டு பின்னர் பேச ஆரம்பித்தார். இதனைப் பார்த்த அதிமுக தொண்டர்கள் கை தட்டி உற்சாக குரல் எழுப்பினர்.