ஒத்துழைப்பு கொடுங்க.. சீக்கிரமே இயல்பு நிலை திரும்பிடும்.. 89% பேர் குணமாகிவிட்டார்கள்.. முதல்வர்
காஞ்சிபுரம்: கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழலிலும், பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து, மாவட்டந்தோறும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில்120 கோடி ரூபாய் மதிப்பில் 43 பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். காஞ்சிபுரத்தை அடுத்த கீழ்க் கதிர் ப்பூரில் கட்டப்பட்டுள்ள 2112 அடுக்கு மாடிக் குடியிருப்புகள் உட்பட 291கோடி ரூபாய் மதிப்பிலான 128 புதிய கட்டங்களை திறந்து வைத்தார்.
எம்ஜிஆரின் அண்ணன் சக்கரபாணியின்...மகன் எம்சி சந்திரன் ... கொரோனாவுக்கு உயிரிழப்பு!!
அதிகாரிகளுடன் ஆய்வு
இதேபோல் சுமார் 22 ஆயிரம் பேருக்கு 42 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இதனிடையே கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் விதம் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் கலெக்டர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
89% பேர் குணமாகிவிட்டார்கள்
கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு 5,500 பேருக்கு பாதிப்பு கண்டறியப்படுகிறது. தற்போது 7 ஆயிரம், 8 ஆயிரம் என்று இருந்த பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையிலும் பாதிப்பை தமிழக அரசு படிப்படியாக குறைத்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதே, அரசின் நடவடிக்கைக்கு சான்று. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 89% பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்கள்.
படுக்கை வசதி உள்ளது
கொரோனாவுக்கு சிறப்பாக சிகிச்சை அளித்ததால் இறப்பு எண்ணிக்கையை பாதியாக குறைத்துள்ளோம். வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்கள் அதிகம் வருகிறார்கள். மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதிகள் உள்ளன. காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்களுக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் மீது தாக்கு
மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் தான் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தவறி விட்டதாக எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் கருதி குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றன. 100, 110 என்று இருந்த உயிரிழப்பு எண்ணிக்கை இப்போது பாதியளவாக குறைந்துவிட்டது. நேரடியாக கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. கொரோனா தடுப்புப் பணியில் மருத்துவர்களும், செவிலியர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகிறார்கள்" இவ்வாறு கூறினார்.