சரிங்களா.. வாசப்படியில இப்படி செய்யுங்க.. நம்ம கைலதான் இருக்குங்க.. வைரலாகும் மஞ்ச தண்ணி!
மஞ்சள் தண்ணீரை கிராம மக்கள் தெளித்து வருகின்றனர்
காஞ்சிபுரம்: "சரிங்களா.. வாசப்படி முன்னாடி இப்படி செய்யுங்க.. நம்ம கையில்தான் எல்லாம் இருக்கு.. இதை மாதிரி எல்லாரும் ஃபாலோ பண்ணுங்க.. ப்ளீஸ்" என்று ஒரு பெண் மஞ்ச தண்ணீரை தெருவில் தெளித்து கொண்டே பேசும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
Recommended Video
அன்றைய காலங்களில், அதாவது மருத்துவ வசதி குறைவான காலகட்டங்களில் நம் மக்கள் கிருமிநாசினிகளை இயற்கை முறையில் பயன்படுத்தி வந்தனர்... வீட்டு வாயில்கள் முன்பு வேப்பிலையை கட்டி... வாசல்களில் மாட்டு சாணம் கொண்டு தெளித்தனர்.
வேப்பிலையை போலவே மஞ்சளும் சரியான கிருமிநாசினி.. இவைகளை முன்னெச்சரிக்கை என்றுகூட நினைத்து பெரியவர்கள் அன்று செய்தது இல்லை.. வெகு இயல்பாகவே இத்தகைய தடுப்பு நடவடிக்கையை நம் முன்னோர்கள் கையாண்டு வந்தனர்.. ஆரோக்கியமும் தழைத்தோங்கியது!
சமீபகாலமாக புது புது நோய்கள் பெருக்கெடுத்து வரும் நிலையில், அன்றைய இயற்கை முறையையே மக்கள் மீண்டும் கையில் எடுத்துள்ளனர்... கொரோனாவில் இருந்து தப்பிக்க மஞ்சள், பூண்டு, வேப்பிலை கலந்து இயற்கை முறையில் கிருமிநாசினி தயார் செய்து அதனை தெளிக்க ஆரம்பித்துள்ளனர்.. ஆனால் இவைகளால் வைரஸ் பாதிப்பில் இருந்து இவைகள் மூலம் மட்டுமே தப்பிவிடலாம் என அறிவியல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்றாலும் முன்னெச்சரிக்கையாக கையாளப்படுகிறது.
கிராமப்புறங்களில் பெரும்பாலான வீடுகளில் பெண்கள் இந்த நீரை தெளித்து வருகின்றனர்.. அந்த வகையில் ஒரு பெண் தன்னுடைய தெருவில் கிராம மக்களுடன் சேர்ந்து மஞ்ச தண்ணீரை தெளிக்கும்போது இதை பற்றி பேசி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.. அதில் அவர் சொல்வதாவது:
"ஹாய் பிரண்ட்ஸ்.. நாங்க காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பக்கத்துல இருந்து பேசுறோம்.. இது ஒரு சின்ன கிராமம்.. 2, 3 தெருதான் இருக்கு.. இங்க பாருங்க, மஞ்சள், வேப்பிலை.. இது ரெண்டையும் அரைச்சு ஒன்னா கலந்து எங்க ஊர் ஃபுல்லா தெளிச்சிட்டு வர்றோம்.. தெரு, கோயில் என எல்லா இடத்திலும் தெளிக்கிறோம்.. இப்படி நாங்க மட்டும் தெளிச்சால் பத்தாது.. நீங்களும், உங்களால முடிஞ்ச அளவுக்கு உங்க ஏரியாவில் தெளிச்சிவிடுங்க.
எல்லாத்தையுமே கவர்ன்மென்ட்டு கிட்ட இருந்து எதிர்பார்க்காதீங்க.. நம்ம கையிலும் இருக்கு.. நாமளும் கொஞ்சம் முயற்சி செய்யணும்.. இதை வெச்சு வாசப்படி முன்னாடி தெளிச்சு விடுங்க.. குழந்தைங்களுக்கும் குளிக்கறதுக்கு யூஸ் பண்ணுங்க.. இப்படி பண்ணினால் நம்மை எந்த ஒரு வைரஸும் தாக்காது.. சரிங்களா.. இதை மாதிரி எல்லாரும் ஃபாலோ பண்ணுங்க.. ப்ளீஸ்.. தேங்க்யூ" என்கிறார். வேப்பிலை, மஞ்சள் என்று பாரம்பரியத்துக்கே திரும்புகிறோம் என்று பாராட்டுகளுடன் நெட்டிசன்கள் இதனை ஷேர் செய்து வருகின்றனர்.