அள்ளி அள்ளி கொடுக்கும் சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றம்.. பல பகுதிகளில் மக்களுக்கு உதவி!
காஞ்சிபுரம் மாவட்ட கிராமங்களில் கொரானா வைரஸ் ஊரடங்கினால் பாதிக்கபட்ட ஏழை பழங்குடியினர் மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு வளைகுடாப்பகுதி தமிழ் மன்றம் மூலம் உதவி செய்துள்ளது.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கிராமங்களில் கொரோனா வைரஸ் ஊரடங்கினால் பாதிக்கபட்ட ஏழை பழங்குடியினர் மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றம் மூலம் உதவி செய்துள்ளது.
கொரோனோ வைரசின் கோரத் தாண்டவத்தால் உலக மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டாலும், ஏழை தினக்கூலி மக்களின் பாதிப்பு பொருளாதார ரீதியில் மிக அதிகமாக உள்ளது. அவர்களுக்கு, தினந்தோறும் உணவு அது பகலில் காணும் கனவு என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றம் , வளைகுடா பகுதியில் சுகாதாரப்பணியாளர்களுக்கு முகக்கவசம் மற்றும் வீடற்ற ஏழை மக்களுக்கு உதவி செய்வது போன்ற நற்பணிகளில் ஈடுபடுகிறது. மேலும் வெளிநாட்டில் இருந்து தமிழகத்தில் அல்லல் படும் மக்களுக்கு நிவாரணப் பணி அளிப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது உள்ள ஊரடங்கு நிலை காரணமாக தினச்சம்பளத்திற்கு வேலை செய்யும் விவசாய மற்றும் சிறு தொழிலாளர்களின் நிலை மிகவும் கடினமாக உள்ளது. அது மட்டுமன்றி சென்னை போன்ற பெருநகரத்தில் வேலை செய்ய சென்ற தொழிலாளர்களும் கிராமப்புறத்திற்குத் திரும்பி வேலை இன்றி இருப்பது சுமையை இன்னும் அதிகமாக்கி உள்ளது.
அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏழ்மை நிலையில் இருக்கும் இருளர் இன பழங்குடியின மக்கள் உண்ண உணவின்றி மிகவும் கடினமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். தினக்கூலி செய்யும் தொழிலாளிகளின் நிலையும் மோசமாக உள்ளது. இதையடுத்து சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றம் சுமார் 1500 ஏழைக் குடும்பத்தினருக்கு உணவு, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கொரோனா தொடர்பான தடுப்பு உபகரணங்கள் ஆகிய நிவாரண பொருட்களைக் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த Children Watch என்ற அமைப்பு மூலம் வழங்க முடிவு செய்து திட்டப்பணியைச் செயல் படுத்த ஆரம்பித்துள்ளது.
இதன் திட்ட மதிப்பு 2,40,100 ரூபாய்கள் ஆகும். முதற்கட்ட நிவாரண பொருட்கள் விநியோகம் காஞ்சிபுரம் மாவட்ட கிராமப் பகுதியில் உண்ண உணவின்றி தவித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழக நிவாரண பணிகளுக்கு மனமுவந்து கொடையளித்த சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழர்களுக்குத் தமிழ் மன்றம் நன்றி தெரிவித்துள்ளது.
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது, என்ற வள்ளுவர் பெருந்தகையின் வாக்குப்படி இதுபோன்ற பல்வேறு நற்பணிகளைச் செயல்படுத்த தங்களால் இயன்ற நன்கொடையை அளிக்கத் தமிழ் மன்றம் சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழர்களை கேட்டுக்கொண்டுள்ளது.
காய்கறி லாரியில் சென்ற பெண்ணுக்கு தொற்று.. பழகிய 82 பேருக்கும் டெஸ்ட்.. கோவில்பட்டியில் பரபரப்பு!