வரும் தேர்தல்களில் அதிமுக, பாஜகவுடனான தேமுதிக கூட்டணி தொடருமா? பிரேமலதா பதில்!
காஞ்சிபுரம்: வரும் தேர்தல்களிலும் தேமுதிக கூட்டணி தொடருமா என்பது குறித்து பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் தேமுதிக சார்பில் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, தேமுதிக சார்பில் குடிநீர் லாரிகள் மூலம் மக்களுக்கு தண்ணீர் விநியோகித்தோம். தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவது வேதனையாக உள்ளது.
மழைக்காலத்தில் தண்ணீரை சேமித்தால் தண்ணீர் பிரச்சனை வராது. பிரதமர் மற்றும் தமிழக முதல்வரிடம் தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனை குறித்து பேசுவோம் என்றும் பிரேமலதா கூறினார்.
பிரேமலதா பதில்
உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா, ஏற்கனவே அறிவித்தப்படி உள்ளாட்சி தேர்தலிலும் வரும் தேர்தல்களிலும் தற்போதுள்ள கூட்டணி தொடரும் என்றார். உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் எந்ததெந்த இடங்களில் தேமுதிக போட்டியிடும் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
கருத்துக் கூறக்கூடாது
அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரேமலத, அதிமுக உட்கட்சிபூசல் குறித்து நாம் கருத்துக்கூறக்கூடாது என்றார்.
நீடிக்கும் காவிரி பிரச்சனை
காவிரி பிரச்சனை பல ஆண்டுகளாக நீடிக்கிறது. காவிரி நீர் பிரச்சனைக்கு மத்திய அரசு மாநில அரசுகள் இணைந்து தீர்வு காண வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
சரிந்த வாக்குவங்கி
தேமுதிக நடந்து முடிந்த 17வது மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. இதில் ஒரு இடத்தில் கூட தேமுதிக வெற்றி பெறவில்லை. தேமுதிகவின் வாக்குவங்கியும் அதளபாதளத்துக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.